ஒரே நேரத்தில்.. 5 பேருக்கு கொரோனா.. என்ன செய்யப் போகிறது இந்திய அணி?

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு தயாராகி வரும் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் ஸ்டிரைக்கர் குர்ஜந்த் சிங் மற்றும் தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரீட் உட்பட அணியின் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று காலை இந்திய ஹாக்கி அணியில் அனைவருக்கும் ஆர்டி-பிசிஆர் சோதனைகள் நடத்தப்பட்டன. லேசான அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
"தற்போது காமன்வெல்த் விளையாட்டு 2022 க்கு தயாராகி வரும் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் இரண்டு வீரர்கள் மற்றும் மூன்று ஆதரவு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது." என்று ஹாக்கி இந்தியா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அறிக்கைகளின்படி, ஸ்ட்ரைக்கர் குர்ஜண்ட் மற்றும் கோச் கிரஹாம் ரீட் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வீடியோ ஆய்வாளர் அசோக் குமார் சின்னசாமிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மற்றொரு வீரர் மிட்ஃபீல்டர் ஆஷிஸ் குமார் டாப்னோ ஆவார்.
காமன்வெல்த் 2022
இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடக்க உள்ள நிலையில், இந்திய ஹாக்கி அணி வீரர்கள் எஸ்ஏஐ வளாகத்தில் நடைபெறும் முகாமில் உள்ளனர்.
பிஆர் ஸ்ரீஜேஷ், மன்பிரீத் சிங், பவன், லலித் குமார் உபாத்யாய், ஹர்மன்பிரீத் சிங், வருண் குமார, அமித் ரோஹிதாஸ் உள்ளிட்ட 31 வீரர்கள் இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.
பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்துக்கு எதிரான FIH ஹாக்கி ப்ரோ லீக் டபுள்-ஹெடர்ஸில் போட்டியிட்ட பிறகு வீரர்கள் இந்த முகாமில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், ஒரே நேரத்தில் அணியில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அணியில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. எனினும், பயிற்சிக்காலம் முடியவே இன்னும் 20 நாட்களுக்கு மேல் உள்ளதால், கவலை கொள்ள எதுவும் இல்லை என அணித் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.