பெங்களூரு : தெற்காசிய கால்பந்து போட்டியில் இந்திய அணி ஒன்பதாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

கர்நாடகாவின் பெங்களூரு நகரில், எஸ்.ஏ.எப்.எப். சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன . இதில், கடந்த ஒன்றாம் தேதி நடந்த போட்டி ஒன்றில் லெபனான் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் விளையாடின. இந்த போட்டியில், போட்டி நேரத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. கூடுதல் நேரத்திலும் எந்த அணியும் வெற்றி பெறவில்லை. எனினும், பெனால்டி முறையில் இந்திய அணி அனைத்து வாய்ப்புகளையும் கோல்களாக மாற்றியது.
இந்திய அணி பெனால்டியில் 4-2 என்ற புள்ளி கணக்கில் லெபனானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்தியாவும், குவைத் அணியும் இறுதிப் போட்டியில் விளையாடின. இந்த போட்டியில் இரு அணியினரும் தொடக்கம் முதலே விறுவிறுப்பாக விளையாடினர். இதனால், கோல் அடிக்க முடியாமல் வீரர்கள் திணறினர். இரு அணிகளும் தலா ஒரு புள்ளிகளுடன் (1-1) போட்டி முடிவின்போது, சமநிலையில் இருந்தன.
இதனால், பெனால்டி ஷூட்அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதில், இந்திய அணியின் கோல் கீப்பர் குர்பிரீத் சிங் சந்து ஒரு கோலை அடிக்க விடாமல் தடுத்து அணி வெற்றி பெற உதவினார். போட்டியில் இந்தியா 5-4 என்ற புள்ளி கணக்கில் குவைத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதனால், 9-வது முறையாக இந்தியாவுக்கு சாம்பியன் பட்டம் கிடைத்து உள்ளது. வெற்றி பெற்ற இந்திய கால்பந்து அணிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.