FIFA World Cup 2022 : புதிய வரலாறு படைத்த மொரோக்கோ.. கலைந்தது போர்ச்சுகல் அணியின் கனவு!!
FIFA World Cup 2022 : பிபா உலகக்கோப்பை முதல் இரண்டு காலிறுதி போட்டிகள் மிகவும் கலவரமாக நடந்து முடிந்த நிலையில், அடுத்தாக மூன்றாவது காலிறுதி போட்டியில் போர்ச்சுகல் மற்றும் மொராக்கோ அணிகள் அல் துமாமா மைதானத்தில் மோதினார்கள்.
முதல் இரண்டு காலிறுதி போட்டியில் வெற்றி பெற்று குரோஷிய மற்றும் அர்ஜென்டினா அணிகள் அரையிறுதிக்குத் தகுதிப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மொரோக்கோ அணி சார்பில் அக்ரஃப் ஹக்கிமி, மஸ்ரௌய் அம்ராபத் ஆகியோர் இந்த உலகக்கோப்பை தொடரில் சிறப்பாகப் பங்களித்து வருகின்றனர். அதேபோல் போர்ச்சுகல் அணி சார்பில் ரொனால்டோ, பெப்பே, ராமோஸ் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். எனவே இந்த போட்டியின் முடிவு எப்படி இருக்கும் என்ற கால்பந்து ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் போர்ச்சுகல் மற்றும் மொரோக்கோ அணிகள் மோதின. இந்த போட்டியின் தொடக்கத்தில் போர்ச்சுகல் ரசிகர்களுக்கு முதல் அதிர்ச்சியாக போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ அணியில் இடம்பெறாமல் வெளியில் அமர வைக்கப்பட்டிருந்தார். மொரோக்கோ அணிக்கு ஒரு வகையில் நம்பிக்கையான தொடக்கமாக இந்த போட்டி ஆரம்பித்தது.
இருஅணிகளும் தங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். போட்டியின் 42-வது நிமிடத்தில் மொரோக்கோ அணியின் யூசுப் என்-நெசிரி தனது அணிக்கான முதல் கோலை அடித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். முதல் பாதியின் இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் மொரோக்கோ அணி முன்னிலையிலிருந்தது.
அடுத்தாக போட்டியின் இரண்டாவது பாதியில் முழுவீச்சில் போர்ச்சுகல் அணி வீரர்கள் செயல்பட்டார்கள். அவர்களுக்கு இணையாக மொரோக்கோ அணி வீரர்களும் தொடர்ந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ போட்டியில் களமிறக்கப்பட்டார்.
அரங்கத்தில் உள்ள அனைவரின் பார்வையும் அவர் மீது தான் இருந்தது போர்ச்சுகல் அணியின் நிலைமையை மாற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு தான் காரணம்.
இந்நிலையில் போட்டியின் இறுதிவரை போர்ச்சுகல் அணி சார்பில் எந்த கோலும் அடிக்கப்படாத நிலையில் கால்பந்து உலகக்கோப்பை அரங்கை அதிர்ச்சியடைய வைக்கும் விதமாக 1-0 என்ற கோல் கணக்கில் மொரோக்கோ அணி போர்ச்சுகல் அணியைத் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.
மேலும் உலகக்கோப்பை அரையிறுதி போட்டிக்கு முன்னேறும் முதல் ஆப்பிரிக்கா அணி என்ற பெருமையையும் வரலாற்றையும் பதிவு செய்தது மொரோக்கோ அணி.
அதேவேளையில் உலகக்கோப்பையிலிருந்து மிகுந்த சோகத்தில் கண்ணீருடன் வெளியேறியது போர்ச்சுகல் அணி. அடுத்தாக அரையிறுதி போட்டியில் மொரோக்கோ அணி பிரான்ஸ் அணியுடன் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.