FIFA World Cup 2022 : அபார வெற்றி.. தரமான சம்பவம் பண்ணிய ஜப்பான்.. சோகத்தில் ஜெர்மனி!!
![FIFA World Cup 2022 : அபார வெற்றி.. தரமான சம்பவம் பண்ணிய ஜப்பான்.. சோகத்தில் ஜெர்மனி!!](https://www.sportspartans.com/assets/uploads/news-1230.jpg)
FIFA World Cup 2022 : பிபா உலகக்கோப்பை 2022 தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், முன்னாள் உலக சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்தி ஜப்பான் அணி தரமான சம்பவம் செய்துள்ளது.
பிபா உலகக்கோப்பையில் மிகவும் முக்கியமான பிரிவாக குரூப்-இ கருதப்படுகிறது. இதற்கு காரணம் அந்த பிரிவில் உள்ள முக்கிய அணிகளான ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் தான். இந்த இருஅணிகளின் ஆட்டத்தை காண தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
மேலும் அந்த பிரிவில் கோஸ்ட்டா ரிக்கா மற்றும் ஜப்பான் அணிகளும் இடம்பெற்றுள்ளன. இவ்வளவு எதிர்பார்ப்பு உள்ள குரூப் -இ பிரிவின் முதல் போட்டியில் ஜெர்மனி மற்றும் ஜப்பான் அணிகள் விளையாடின. எப்படியும் இந்த போட்டியின் முடிவு ஜெர்மனி அணிக்கு சாதகமாக தான் இருக்கும் என்று அனைவராலும் கருதப்பட்ட நிலையில் உலகக்கோப்பை அரங்கில் ஒரு மிகப்பெரிய சம்பவத்தை ஜப்பான் அணி நிகழ்த்திக்காட்டியது.
நேற்றைய போட்டியின் முடிவில் ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியை தோற்கடித்து கால்பந்து உலகக்கோப்பையில் ஒரு சாதனையை பதிவுசெய்தது .
ஆட்டத்தை தொடங்கிய ஜெர்மனி - முடித்துவைத்த ஜப்பான்:
ஜெர்மனி மற்றும் ஜப்பான் அணிகள் தங்கள் முதல் போட்டியை "கலிஃபா" மைதானத்தில் விளையாடினர். போட்டி தொடங்கியதும் இரு அணி வீரர்களும் தங்கள் கோலுக்கான வாய்ப்பைத் தேடி முழுவீச்சில் செயல்பட்டார்கள்.
அந்த நேரத்தில் ஜெர்மனி அணிக்கு கிடைத்த பெனாலிட்டி வாய்ப்பை அந்த அணியின் வீரர் இல்கே குண்டோகன் சிறப்பான முறையில் கோலாக மாற்றி தங்கள் அணியை முன்னிலை பெறச் செய்தார். இந்நிலையில் போட்டியின் பாதி நேரமுடிவில் அனைவரின் எதிர்பார்ப்பை போல் ஜெர்மனி அணி முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் தங்கள் முழுத்திறமையும் காட்டிய ஜப்பான் அணிக்கு சாதகமாக அந்த அணியின் வீரர் ரிட்சூ டோவன் தன் அணிக்கான முதல் கோலைப் பதிவு செய்தார். இதன் மூலம் ஸ்கோர் 1-1 என சமநிலைக்கு மாறியது.
இதை சற்றும் எதிர்பாராத ஜெர்மனி அணிக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக போட்டியின் 83-வது நிமிடத்தில் ஜப்பான் அணியின் இளம் வீரர் டகுமா அசானோ ஒரு கோலை அடித்தார். இதனால் 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணி ஜெர்மனி அணியை வீழ்த்தியது. இதன் மூலம் இந்த உலகக்கோப்பையில் நடந்த ஒரு தரமான சம்பவமாக இந்த படம் அமைந்துள்ளது.