FIFA World Cup 2022 : கடைசி வரை திக் திக்.. பெனால்ட்டி வாய்ப்பில் ஜப்பானை பந்தாடிய குரேஷியா.. காலிறுதிக்கு முன்னேறியது!!
FIFA World Cup 2022 : பிபா உலகக்கோப்பை 2022 "சூப்பர்-16" நாக்கவுட் சுற்றின் ஐந்தாவது போட்டியில் ஜப்பான் மற்றும் குரோஷியா அணிகள் அல் ஜனோப் மைதானத்தில் விளையாடினார்கள்.
ஜப்பான் அணி இந்த உலகக்கோப்பை தொடரில் இதுவரை ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி அணிகளை வென்று சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது. இதற்கு இடையில் குரோஷியா அணியும் இந்த தொடரில் இதுவரை தோல்வியைச் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த போட்டி கால்பந்து ரசிகர்கள் இடையில் முக்கிய போட்டியாக எதிர்பார்க்கப்பட்டது.
இந்த போட்டி தொடங்கியவுடன் இரு அணி வீரர்களும் தங்கள் அணிக்கான முதல் கோலை அடிக்கும் முனைப்பில் முழுவீச்சில் விளையாடினார்கள். ஆனால் போட்டியின் முதல் பாதியில் ஜப்பான் அணி வீரர்கள் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதன்மூலம் போட்டியின் 43-வது நிமிடத்தில் ஜப்பான் அணியின் வீரர் டெய்சன் மேடா தன் அணிக்கான முதல் கோலை அடித்தார்.
இதற்குப் பதில் அளிக்கும் விதமாகப் போட்டியின் இரண்டாவது பாதி தொடங்கியவுடன், குரோஷியா அணி வீரர் இவான் பெரிசிச் தனது அணிக்கான முதல் கோலை பதிவு செய்தார். இதன்மூலம் இருஅணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையிலிருந்தது. மேலும் இறுதிவரை இருஅணிகள் சார்பில் எந்த கோலும் பதிவாகாத நிலையில் ஆட்டம் டிராவானது.
அடுத்தாக போட்டியில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அந்த நேரத்திலும் இருஅணிகளும் கோல் ஏதும் அடிக்காத நிலையில் இந்த உலகக்கோப்பை 2022-ல் முதல் முறையாக பெனாலிட்டி மூலம் போட்டியின் முடிவு அறிவிக்கப்படும் என்று முடிவானது.
இரு அணிகளுக்கும் வழங்கபட்ட தலா ஐந்து பெனாலிட்டி வாய்ப்புகளில் குரோஷியா அணி சார்பில் நிகோலா விளாசிக், மார்செலோ ப்ரோசோவிக்,மரியோ பசாலிக் ஆகியோர் 3 கோல்களை அடித்தனர். ஆனால் ஜப்பான் அணி சார்பில் டகுமா அசனோமட்டும் 1 கோல் அடித்தார்.
இந்த போட்டியில் முடிவில் பெனாலிட்டி முறையில் 3-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணி ஜப்பான் அணியை வென்று காலிறுதிக்குச் சென்றது. குரோஷியா அணியின் இந்த சிறப்பான வெற்றிக்குக் காரணம் அந்த அணியின் கோல் கீப்பர் டொமினிக் லிவகோவிச் தான் என்று கூறினால் மிகையில்லை.
அவர் பெனாலிட்டி ஷூட் அவுடின் போது ஜப்பான் அணியின் மூன்று கோல்களைத் தடுத்தார். இதுவே குரோஷியா அணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.
கடந்த உலகக்கோப்பையில் இறுதிவரை சென்று தோல்வி அடைந்த குரோஷியா அணி இந்த 2022 உலகக்கோப்பையை வெல்லும் முனைப்பில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. அடுத்தாக காலிறுதியில் குரோஷியா அணி பிரேசில் அணியுடன் மோதயிருப்பது குறிப்பிடத்தக்கது.