FIFA World Cup 2022 : வலுவான பெல்ஜியம் மண்ணைக் கவ்வியது.. மொரோக்கோ அபார வெற்றி!!
FIFA World Cup 2022 : பிபா 2022 உலகக்கோப்பை கால்பந்தில் தொடர்ந்து முக்கிய அணிகள் பல தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில், நேற்றைய போட்டியில் குரூப்-எப் பிரிவில் உள்ள பெல்ஜியம் மற்றும் மொரோக்கோ அணிகள் அல் துமாமா மைதானத்தில் மோதின.
இந்த போட்டியின் இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியை மொரோக்கோ அணி வீழ்த்தியது. இது உலகக்கோப்பை அரங்கில் மற்றும் ஒரு அதிர்ச்சி சம்பவமாகப் பதிவானது. உலக கால்பந்து அணிகள் தரவரிசையில் பெல்ஜியம் அணி 2-வது இடத்திலும் மொரோக்கோ அணி 22-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியின் ஆரம்பத்திலிருந்தே பெல்ஜியம் அணி வீரர்களுக்கு இணையாக மொரோக்கோ அணி வீரர்கள் தங்கள் முழு முயற்சியுடன் விளையாடினார்கள். இதனால் இரு அணிக்கும் கோல் ஏதும் பதிவாகாமலேயே ஆட்டம் நகர்ந்தது. இந்த போட்டியின் முதல் பாதி நேரத்தில் கிடைத்த கூடுதல் நேரத்தில் பிரீ-கிக் மூலம் கிடைத்த வாய்ப்பில் மொரோக்கோ வீரர் ஹக்கீம் அடித்த கோல் ஆப்-சைடு என்று மறுக்கப்பட்டது. இதனால் முதல் பாதி கோல் ஏதும் அடிக்காமல் முடிவுக்கு வந்தது.
இந்த போட்டியின் இரண்டாவது பாதி ஆரம்பித்த உடனே திறமையாகச் செயல்பட்ட மொரோக்கோ அணிக்கு ,ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் பிரீ கிக் மூலம் ஒரு வாய்ப்பு கிடைத்தது. இதனைச் சரியாகப் பயன்படுத்திய மொரோக்கோ வீரர் அப்துல் ஹமீத் சப்ரி தனது அணிக்கான முதல் கோலை பதிவுச் செய்தார். பின்பு தொடர்ந்த போட்டியில் கடைசி கூடுதல் நேரத்தில் மொரோக்கோ அணியின் மற்றொரு வீரர் சகாரிய ஒரு கோலை அடித்தார்.
இறுதி வரை பெல்ஜியம் அணி கோல் ஏதும் அடிக்காததால் ஆட்டத்தின் முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் மொரோக்கோ அணி பெல்ஜியம் அணியை உலகக்கோப்பை அரங்கில் வீழ்த்தி அதிர்ச்சியை அளித்தது. இந்த வெற்றியின் மூலம் குரூப்-எப் பிரிவில் முதல் இடத்தை மொரோக்கோ அணி அடைந்தது. மேலும் பெல்ஜியம் அணியின் இந்த தோல்வி மூலம் அடுத்த சுற்றிற்குச் செல்லும் வாய்ப்பில் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.