விம்பிள்டன் டென்னிஸ்.. முதல் சுற்றில் ஜோகோவிச் வெற்றி!

லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் செர்பிய வீரர் ஜோகோவிச் வெற்றி பெற்றுள்ளார்.
ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிக உயரியதாக மதிப்பிடப்படும் இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நேற்று தொடங்கியது. இதில் காயம் காரணமாக ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் விலகி விட்டார்.
நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வீராங்கனை கரோலின் கார்சியாவும், அமெரிக்காவைச் சேர்ந்த katie volynets-ம் மோதினர். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய கரோலின், 6-4,6-3 எனும் நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதேபோல் பிரெஞ்சு ஓபன் சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான ஸ்வியாடெக், சீனாவின் லின் ஜூவை 6-1, 6-3 எனும் கணக்கில் தோற்கடித்து இரண்டாம் சுற்றுக்குள் நுழைந்தார்.
நட்சத்திர வீரரும், 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளருமான செர்பியாவின் ஜோகோவிச், தனது முதல் சுற்றில் தர வரிசையில் 67வது இடத்தில் உள்ள அர்ஜென்டினாவில் பெட்ரோ சாசினுடன் மோதினார். இதில் 6-3, 6-3, 7-6 எனும் கணக்கில் வெற்றி பெற்ற ஜோகோவிச், இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 7 முறை சாம்பியனும், 23 கிராண்ட்ஸ்லாம் வென்ற உலக சாதனையாளருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) பட்டம் வெல்லவே அதிக வாய்ப்புள்ளது. இந்த சீசனில் ஏற்கனவே ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபனில் வாகை சூடியுள்ள அவர் புல்தரை போட்டியான விம்பிள்டனிலும் ஆதிக்கம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தடவையும் பட்டம் வென்றால் அதிக முறை விம்பிள்டன் கோப்பையை உச்சிமுகர்ந்தவரான முன்னாள் வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரின் (8 முறை) சாதனையை சமன் செய்வார்.