விம்பிள்டன் தொடர் : அரையிறுதிக்கு ஜோகோவிச் தகுதி

லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் செர்பிய வீரர் ஜோகோவிச், அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றாகவும், மிக உயரியதாக மதிப்பிடப்படும் இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிச் சுற்று போட்டியில் தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் செர்பியாவின் ஜோகோவிச், 7-ம் நிலை வீரர் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லேவுடன் மோதினார்.
இதில் ஜோகோவிச் முதல் செட்டை இழந்தார். சுதாரித்துக் கொண்ட ஜோகோவிச் அடுத்த 3 செட்களையும் கைப்பற்றி அசத்தினார். இறுதியில் ஜோகோவிச் 4-6, 6-1, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், ரஷிய வீரர் ரோமன் சபியுலினுடன் மோதினார். இதில் சின்னர் 6-4, 3-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் கூட்டணி டேவிட் பெல் (நெதர்லாந்து)-ரீஸ் ஸ்டால்டெர் (அமெரிக்கா) இணையை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் போபண்ணா- மேத்யூ எப்டென் கூட்டணி 7-5, 4-6, 7-6 (10-5) என்ற செட் கணக்கில் டேவிட் பெல் - (அமெரிக்கா) இணையை தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றது