விம்பிள்டன் தொடர் : முன்னணி வீரர் கேஸ்பர் ரூட் அதிர்ச்சி தோல்வி

லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர் கேஸ்பர் ரூட் தோல்வி அடைந்ததால் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.
'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 4-ம் நிலை வீரர் கேஸ்பர் ரூட் (நார்வே), தரவரிசையில் 142-வது இடம் வகிக்கும் லியாம் பிராட்டியை (இங்கிலாந்து) எதிர்கொண்டார். 5 செட் வரை நீடித்த திரிலிங்கான இந்த மோதலில் லியாம் பிராட்டி 6-4, 3-6, 4-6, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் கேஸ்பர் ரூட்டுக்கு அதிர்ச்சி அளித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 3 மணி 27 நிமிடங்கள் நீடித்தது.
7-ம் நிலை வீரர் ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா) தன்னை எதிர்த்த சக நாட்டவர் அஸ்லான் கரட்சேவை 6-7 (4-7), 6-3, 6-4, 7-5 வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), ஷபோவலோவ் (கனடா), பெரேட்டினி (இத்தாலி), ஹர்காக்ஸ் (போலந்து) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றியை சுவைத்தனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா 6-1, 1-6, 6-1 என்ற செட் கணக்கில் எலிஸ் மெர்டென்சை (பெல்ஜியம்) தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் ஜூலி நீமைர் (ஜெர்மன்) 6-4, 5-7, 6-1 என்ற செட் கணக்கில் சமீபத்தில் பிரெஞ்சு ஓபனில் இறுதிப்போட்டி வரை எட்டியவரான கரோலினா முச்சோவாவை (செக்குடியரசு) விரட்டினார். இதே போல் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) 6-3, 6-0 என்ற நேர் செட்டில் போடோரோஸ்கோவை (அர்ஜென்டினா) ஊதித்தள்ளினார்.
முன்னதாக ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்ரு இரவு நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச் சுவிஸ் வீரர் வாவ்ரின்காவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் முதல் இரண்டு செட்களை 6-3, 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதையடுத்து நடைபெற்ற 3வது செட் ஆட்டத்தில் ஜோகோவிச்சுக்கு சற்று நெருக்கடி கொடுத்த வாவ்ரின்கா கடுமையாக போராடினார்.
ஆனால் இறுதியில் 3வது செட்டையும் ஜோகோவிச் கைப்பற்றினார். இறுதியில் 6-3, 6-1, 7-6 என்ற செட் கணக்கில் வாவ்ரின்காவை வீழ்த்தி ஜோகோவிச் 4வது சுற்றுக்கு முன்னேறினார்.