விம்பிள்டன் டென்னிஸ் இன்று கோலாகல தொடக்கம் : காயம் காரணமாக ரபேல் நடால் விலகல்; அடுத்த சாதனை படைப்பாரா ஜோகோவிச்?
![விம்பிள்டன் டென்னிஸ் இன்று கோலாகல தொடக்கம் : காயம் காரணமாக ரபேல் நடால் விலகல்; அடுத்த சாதனை படைப்பாரா ஜோகோவிச்?](https://www.sportspartans.com/assets/uploads/news-2314.jpg)
லண்டன் : 'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகளில், மிக உயரியதாக மதிப்பிடப்படும் இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இன்று தொடங்குகிறது.
ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிக உயரியதாக மதிப்பிடப்படும் இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று தொடங்கி 16-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி முன்னணி வீரர், வீராங்கனைகள் அங்கு முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். காயம் காரணமாக ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் விலகி விட்டார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 7 முறை சாம்பியனும், 23 கிராண்ட்ஸ்லாம் வென்ற உலக சாதனையாளருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) பட்டம் வெல்லவே அதிக வாய்ப்புள்ளது. இந்த சீசனில் ஏற்கனவே ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபனில் வாகை சூடியுள்ள அவர் புல்தரை போட்டியான விம்பிள்டனிலும் ஆதிக்கம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தடவையும் பட்டம் வென்றால் அதிக முறை விம்பிள்டன் கோப்பையை உச்சிமுகர்ந்தவரான முன்னாள் வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரின் (8 முறை) சாதனையை சமன் செய்வார். தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் ஜோகோவிச் முதல் சுற்றில் 67-ம் நிலை வீரர் அர்ஜென்டினாவின் பெட்ரோ காசினுடன் மோதுகிறார்.
ஜோகோவிச்சுக்கு 'நம்பர் ஒன்' இளம் புயல் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), டேனில் மெட்விடேவ் (ரஷியா), கேஸ்பர் ரூட் (நார்வே), சிட்சிபாஸ் (கிரீஸ்), ஹோல்ஜர் ருனே (டென்மார்க்), ரூப்லெவ் (ரஷியா), ஜானிக் சின்னெர் (இத்தாலி) உள்ளிட்டோர் கடும் சவால் அளிக்க உள்ளார்கள். மகளிர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வாய்ப்பில் 'நம்பர் ஒன்' நட்சத்திரமும், பிரெஞ்சு ஓபன் சாம்பியனான இகா ஸ்வியாடெக் உள்ளார். போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.464 கோடியாகும். இது கடந்த ஆண்டை விட 11.2 சதவீதம் அதிகமாகும்.