Pro Kabaddi League 2022 : பக்கா மாஸ்.. முதல் முறையாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிப் பெற்றது தமிழ் தலைவாஸ்!!
Pro Kabaddi League 2022 : இந்தியாவில் இப்போது நடந்து கொண்டிருக்கும் ப்ரோ கபடி லீக் சீசன்-9ல் விளையாடும் தமிழ் தலைவாஸ் அணி பலவருடங்களாக எதிர்பார்த்த ஒரு நிகழ்வை ஏற்படுத்தி தமிழக கபடி ரசிகர்கள் இடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2022-ஆம் ஆண்டிற்கான ப்ரோ கபடி லீக் தொடங்கி, அதில் இடம்பெற்றுள்ள அணிகள் எல்லாம் தங்கள் லீக் சுற்றின் போட்டிகளில் விளையாடி வந்தன. இப்பொழுது லீக் சுற்றுகள் முடிவடைந்து புள்ளிகளின் அடிப்படையில் அணிகள் எல்லாம் அடுத்த ப்ளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்று வருகின்றன.
இந்த சீசன்-9ல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழ் தலைவாஸ் அணி 9-போட்டிகளில் வென்றது. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றான ப்ளே-ஆப் தகுதி பெறலாம் என்ற நிலையில் உ.பி. யோத்தாஸ் அணியுடன் மோதியது தமிழ் தலைவாஸ் அணி.
கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கிய போட்டியில் சீறிப் பாய்ந்த தமிழ் தலைவாஸ் அணியின் நரேந்தர் மற்றும் கேப்டன் அஜிங்க்யா பவார் தங்கள் சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணியை முன்னிலை பெறச்செய்தனர். பிறகு உ.பி. யோத்தாஸ் அணி சார்பாகப் பலவாராக முயன்றும் தமிழ் தலைவாஸ் அணியின் ஆட்டத்திற்கு எதிராக எதுவும் எடுபடவில்லை.
இறுதியாக 43-28 என்ற புள்ளிகள் அடிப்படையில் தமிழ் தலைவாஸ் அணி உ.பி. யோத்தாஸ் அணியைத் தோற்கடித்து ப்ரோ கபடி லீக் வரலாற்றில் முதல் முறையாக ப்ளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்று தமிழக ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினர். அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்த நரேந்தர் அந்த போட்டியில் 10-புள்ளிகளையும் கேப்டன் அஜிங்க்யா பவார் 9-புள்ளிகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மொத்தமாக 6-அணிகள் ப்ளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெறும். இதில் தமிழ் தலைவாஸ் அணி 5-வது அணியாகத் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்த முறை சாம்பியன் பட்டத்தைத் தமிழ் தலைவாஸ் அணி கைப்பற்றுமா என்று தமிழக கபடி ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.