சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் வங்கதேச வீரர் தமீம் இக்பால் - சோகத்தில் செய்தியாளர்கள் முன்பு கண்ணீர் வடித்த வீரர்!
![சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் வங்கதேச வீரர் தமீம் இக்பால் - சோகத்தில் செய்தியாளர்கள் முன்பு கண்ணீர் வடித்த வீரர்!](https://www.sportspartans.com/assets/uploads/news-2339.jpg)
வங்கதேச கிரிக்கெட் அணியின் தொடக்க வீரராக ஆரம்பத்தில் இருந்தே ஜொலித்தவர் தமீம் இக்பால். 2007 ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான இந்த இடது கை ஆட்டக்காரர், தனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டு வங்கதேச அணியின் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்தார். 2007 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில், இந்திய அணி லீக் போட்டிகளிலேயே வெளியேறியது ரசிகர்களால் இன்று வரை மறக்க முடியாத துயரமாக இருக்கிறது.
குறிப்பாக அப்போதைய கிரிக்கெட் உலகில் கத்துக்குட்டியாக இருந்த வங்கதேச அணியிடம் படுதோல்வி அடைந்ததால் இந்திய அணி, அந்தத் தொடரில் இருந்தும் வெளியேறியது. கிரிக்கெட் ரசிகர்களால் முக்கியமான ஆட்டமாக பார்க்கப்படும் இந்தப் போட்டியில், இளம் வீரர் தமீம் இக்பால் அரை சதம் விளாசி பலரின் புருவத்தையும் உயர்த்த வைத்தார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவர், ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான வங்கதேச அணியின் கேப்டனாகவும் பொறுப்பு வகித்தார்.
இந்த நிலையில் திடீரென செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய தமிம் இக்பால், தனது ஓய்வு அறிவிப்பை கண்ணீர் மல்க அறிவித்தார். இதனை சற்றும் எதிர்பாராத கிரிக்கெட் ரசிகர்கள், 34 வயதில் தமிம் இக்பாலின் இந்த முடிவுக்கு வருத்தம் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு எதிரான போட்டியில் வங்கதேச கிரிக்கெட் அணி படுதோல்வி அடைந்ததே, இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 8000 ரன்களுக்கு மேல் குவித்துள்ள தமிம் இக்பால், 14 சதங்களையும் பூர்த்தி செய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் உலகிலும் அவர் ஐந்தாயிரம் இடங்களை கடந்து இருக்கிறார். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிலும் சதம் கண்ட இந்த வீரர், வங்கதேச கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக கருதப்படுகிறார். இன்னும் மூன்றே மாதங்களில் உலக கோப்பை நடைபெற இருக்கும் சூழலில், அவர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு இருப்பது பேசு பொருளாகியுள்ளது. இதையடுத்து வங்கதேச அணியை சகிப் அல்ஹசன் அல்லது லிட்டன் தாஸ் ஆகியோரில் யாரேனும் ஒருவர் வழி நடத்துவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.