T20 World Cup 2022 : இது நடந்தால் மட்டும் தான் அரையிறுதிக்குள் என்ட்ரி.. இந்தியாவுக்கு முளைத்த சிக்கல்!!
T20 World Cup 2022 : ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் இன்று தென்னாப்பிரிக்காவை பாகிஸ்தான் அணி வீழ்த்தியுள்ளதால், இந்தியாவின் அரையிறுதி கனவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சூப்பர் 12 சுற்றில் மொத்தம் 12 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் குழு 1'இல் அனைத்து அணிகளுக்கும் தலா ஒரு போட்டி மீதமுள்ள நிலையில், எந்த அணியும் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய முடியாமல் தவித்து வருகிறது,
அதே போல் இந்தியா இடம் பெற்றுள்ள குழு 2'லும் தற்போது இதேபோன்ற ஒரு இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது. இன்று நடந்த சூப்பர் 12 சுற்று போட்டியில் குழு 2'இல் உள்ள பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. வலுவான தென்னாப்பிரிக்கா இந்த ஸ்கோரை எளிதில் ஊதித் தள்ளிவிடும் என எதிர்பார்த்தால், அதற்கு நேர்மாறாக தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.
இதற்கிடையே மழையால் ஆட்டம் தடைபட்ட நிலையில், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 14 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டு 142 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எனினும் கடைசி வரை போராடிய தென்னாப்பிரிக்கா 14 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தான் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் பின்தங்கியிருந்த பாகிஸ்தான் தற்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தியா முதலிடத்திலும், தென்னாப்பிரிக்கா 2 ஆம் இடத்திலும் உள்ளன. 4வது இடத்தில் வங்கதேசமும், ஐந்தாவது இடத்தில் ஜிம்பாப்வே மற்றும் 6வது இடத்தில் நெதர்லாந்து அணிகளும் உள்ளன.
அனைத்து அணிகளுக்கும் இன்னும் தலா ஒரு போட்டி மீதமுள்ள நிலையில், ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகள் அரையிறுதி வாய்ப்பை அதிகாரப்பூர்வமாக இழந்து விட்டன. இந்தியா 6 புள்ளிகளுடனும் தென்னாப்பிரிக்கா 5 புள்ளிகளுடனும், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் தலா 4 புள்ளிகளுடனும் உள்ளன.
இன்றைய போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியிருந்தால், தென்னாப்பிரிக்காவின் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகியிருக்கும். மேலும் பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக போட்டியிலிருந்து வெளியேறியிருக்கும். ஆனால் அது நடக்காததால் தற்போது நிலைமை இடியாப்ப சிக்கலில் கொண்டுபோய் விட்டுள்ளது.
அடுத்த போட்டிகளில் தென்னாப்பிரிக்கா நெதர்லாந்துடன் மோத உள்ள நிலையில், இந்தியா ஜிம்பாப்வே அணியுடன் மோத உள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தான் வங்கதேசத்துடன் மோத உள்ளது. வங்கதேசத்தின் நிகர ரன் ரேட் மிக குறைவாக உள்ளதால், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றாலும், அரையிறுதிக்குள் நுழைவது மிகவும் கடினம்.
அதே நேரத்தில் இந்தியாவின் நிகர ரன் ரேட் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்காவை விட குறைவாக உள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக ஜிம்பாப்வே நடத்திய மேஜிக்கை இந்தியாவிடமும் காட்டி, அதே நேரத்தில் பாகிஸ்தான் வங்கதேசத்தை வீழ்த்தினால், இந்தியாவின் அரையிறுதி வாய்ப்புக்கு சங்கு தான்.
இப்போதைய நிலவரப்படி இந்தியா அரையிறுதிக்குள் நுழைய வேண்டுமானால் ஒன்று இந்தியா ஜிம்பாப்வேவை வீழ்த்த வேண்டும். ஒருவேளை இந்தியா தோற்றுவிடும்பட்சத்தில் தென்னாப்பிரிக்காவும் தோற்க வேண்டும்.
சூப்பர் 12 சுற்றின் இறுதி நாளான நவம்பர் 6 ஆம் தேதி தான் இந்தியா-ஜிம்பாப்வே, பாகிஸ்தான்-வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா-நெதர்லாந்து போட்டிகள் நடக்க உள்ளதால், கடைசி நாள் வரை சஸ்பென்ஸ் நீடிக்க உள்ளது.