இந்த முறை உலகக்கோப்பை இந்திய அணிக்குத்தான்.. அடித்து சொல்லும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர்!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், சாம்பியன் பட்டத்தை இந்திய அணிதான் வெல்லும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடரானது இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இன்னும் இந்த தொடரானது துவங்குவதற்கு 100 நாட்களுக்கும் குறைவாகவே உள்ள வேளையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை அதிகாரபூர்வமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டது. அதன்படி அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி துவங்கும் இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் 40-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த தொடரில் ஏற்கனவே 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ள வேளையில் எஞ்சியுள்ள இரண்டு இடங்களுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் நடப்பாண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிதான் கோப்பையை கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளது என்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில், இந்திய அணி அட்டவணைப்படி கடைசி நேரத்தில் பலம் வாய்ந்த அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் விளையாடினால் அது சரியாக இருக்காது. பலம் வாய்ந்த அணிகளை முன்கூட்டியே நாம் எதிர்கொண்டு வெற்றிபெற்று விட்டால் அந்த நல்ல நம்பிக்கையுடன் எஞ்சியுள்ள கடைசி கட்ட போட்டிகளில் சிறிய அணிகளை எளிதில் வீழ்த்தி வெற்றி பெறலாம்.
அந்த வகையில் அட்டவணைப்படி இந்திய அணிக்கு தற்போது அதிக சாதகம் இருக்கிறது. ஏனெனில் இந்திய அணியானது ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து போன்ற பெரிய அணிகளுக்கு எதிராக முன்கூட்டியே மோதுவதால் கடைசி கட்டத்தில் சிறிய அணிகளை எளிதில் அழுத்தம் இன்றி கையாளும். என்னை பொறுத்தவரை இந்திய அணி பைனலுக்கு சென்றுவிட்டால் இந்த உலகக் கோப்பை கைப்பற்றுவது உறுதி இவ்வாறு அவர் கூறியுள்ளார்.