உலகக்கோப்பை தகுதிச்சுற்று: கனவை காவு கொடுத்த ஜிம்பாப்வே.. ஸ்காட்லாந்து வெற்றி!
![உலகக்கோப்பை தகுதிச்சுற்று: கனவை காவு கொடுத்த ஜிம்பாப்வே.. ஸ்காட்லாந்து வெற்றி!](https://www.sportspartans.com/assets/uploads/news-2327.jpg)
புலவாயோ: ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததன் மூலம் ஜிம்பாப்வே அணியின் உலகக்கோப்பை கனவு முடிவுக்கு வந்துள்ளது. இதனால் இந்தியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்க ஸ்காட்லாந்து அணிக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடருக்கு 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. மீதமுள்ள 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்பேயில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை அணி ஏற்கனவே உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.
மீதமுள்ள இரு இடத்துக்கு ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இந்த நிலையில் இன்றைய சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் ஜிம்பாப்வே - ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் கிரைக் எர்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்பின்னர் முதலில் பேட்டிங் ஆடிய ஸ்காட்லாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 234 ரன்கள் சேர்த்தது.
கடைசி 5 ஓவர்களில் மட்டும் ஸ்காட்லாந்து அணி 54 ரன்கள் சேர்த்ததன் மூலம் அந்த அணிக்கு நம்பிக்கை கிடைத்தது. அதிகபட்சமாக அந்த அணியிம் மைக்கேல் லீஸ்க் 34 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. ஸ்காட்லாந்து அணியின் சோல் பந்துவீச்சில் ஜாய்லார்ட் டக் அவிட்டாகியும், கேப்டன் எர்வின் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து வில்லியம்ஸ், இன்னசென்ட் தலா 12 ரன்களில் ஆட்டமிழக்க, ஜிம்பாப்வே அணி 37 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதன்பின்னர் ரியான் பர்ல் - சிக்கந்தர் ராசா கூட்டணி இணைந்து போராடியது. இதில் நிதானமாக ஆடிவந்த சிக்கந்தர் ராசா 34 ர்ன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வெஸ்லியும் 40 ரன்களில் வெளியேறினார். ஆனால் ரியான் பர்ல் தொடர்ந்து போராட்டத்தை வெளிப்படுத்தினார்.
அரைசதம் கடந்தும் சிறப்பாக ஆடிய அவருக்கு, டெய்லண்டர்கள் யாரும் உதவியாக நிற்கவில்லை. ஜிம்பாப்வே அணி 197 ரன்கள் எடுத்திருந்த போது, பர்ல் 83 ரன்களில் ஆட்டமிழக்க, ஜிம்பாப்வே கனவு முடிவுக்கு வந்தது. இறுதியாக ஜிம்பாப்வே அணி 41.1 ஓவர்களில் 203 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன் மூலம் உலகக்கோப்பைத் தொடருக்கான போட்டியில் இருந்து ஜிம்பாப்வே அணி வெளியேறியுள்ளது.