உலகக்கோப்பைத் தொடர்: இந்தியா வருவதில் பாகிஸ்தான் அணிக்கு சிக்கல்
![உலகக்கோப்பைத் தொடர்: இந்தியா வருவதில் பாகிஸ்தான் அணிக்கு சிக்கல்](https://www.sportspartans.com/assets/uploads/news-2290.jpg)
மும்பை : இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டணை வெளியாகியுள்ளது. அக்.5 தேதி தொடங்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், 45 லீக் போட்டிகள், 2 அரையிறுதிப் போட்டிகள், கடைசி இறுதிப்போட்டி என்று நவ.19ஆம் தேதி வரை போட்டிகள் நடக்கவுள்ளது. மொத்தமாக 10 அணிகள் ரவுண்ட் ராபின் முறையில் லீக் போட்டிகளில் மோதவுள்ளனர். இதற்காக 10 மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் மைதானத்தில் அக்.15ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 1.32 லட்சம் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள மைதானம் என்பதால், இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்பதில் பாகிஸ்தான் அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அந்நாட்டு அரசின் அனுமதி அவசியமாகும். 2016ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பைத் தொடரில் அரசின் அனுமதியோடு தான் பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாடியது.
இந்த நிலையில் இந்தியாவில் நடக்கவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்க அந்நாட்டு அரசு இதுவரை அனுமதியளிக்கவில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் அரசின் அனுமதி கிடைத்த பின், ஐசிசி நிர்வாகத்திடன் பிசிபி நிர்வாகம் தெரிவிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல் உலகக்கோப்பைத் தொடரில் விளையாடுவோம் என்ற ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கையெழுத்திட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. அதனால் உலகக்கோப்பைத் தொடர் பாகிஸ்தான் அணியை உள்ளடக்கிய 10 நாடுகள் பங்கேற்கும் தொடராகவே நடத்தப்படும். அனைத்து நாடுகளின் விதிகளையும் நாங்கள் மதிக்கிறோம். அதனால் நிச்சயம் பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையில் பங்கேற்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.