இந்தியா vs இலங்கை : கோலி,ரோஹித் அதிரடி ..! இந்திய அணி அசத்தல் வெற்றி ..!
![இந்தியா vs இலங்கை : கோலி,ரோஹித் அதிரடி ..! இந்திய அணி அசத்தல் வெற்றி ..!](https://www.sportspartans.com/assets/uploads/news-1559.jpg)
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் முதல் ஒருநாள் போட்டியின் கவுகாத்தியில் உள்ள மைதானத்தில் மோதினார்கள்,இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனக பௌலிங்கை தேர்வு செய்தார்.இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
இந்த போட்டியில் தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை இளம் வீரரான சுப்மன் கில் நல்ல முறையில் பயன்படுத்தி 70(60) ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்,அதன்பின் காயத்திலிருந்து மீண்டு வந்த அணியின் கேப்டன் ரோஹித்சர்மா தனது பங்கிற்கு சிறப்பாக விளையாடி 83(67) ரன்களை பதிவு செய்து ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக களமிறங்கிய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி பொறுப்புடன் விளையாடினார்,ஆனால் அவருடன் ஜோடி சேர்ந்த வீரர்கள் ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இந்திய அணிக்கு கைகொடுக்கும் வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி ஒருநாள் தொடரில் தனது 45-வது சதத்தை பதிவு செய்தார்,அதன்பின் 113(87) ரன்களை அடித்து ஆட்டமிழந்தார், இறுதியாக இந்திய அணி 50-ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்களை பதிவு செய்தது.
இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் உடனுக்குடன் ஆட்டமிழந்தார்கள், நிதானமாக விளையாடிய பதும் நிஸ்ஸங்க 72(80) ரன்களை எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.அதன்பின் களமிறங்கிய இலங்கை அணியின் வீரர்கள் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆட்டம் இழந்தார்கள்.
இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனக இறுதிவரை பொறுப்புடன் விளையாடி சதம் அடித்து அசத்தினார்,தனது அணிக்காக தனி ஒருவராக போராடிய ஷனக 108*(88) ரன்களை பதிவு செய்தார்,இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 306 ரன்களை மட்டுமே எடுத்தது.
இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய இளம் வீரர் உம்ரான் மாலிக் 8 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.இந்நிலையில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது, அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.