ஜூன் 27ல் ஐசிசி உலகக்கோப்பை அட்டவணை வெளியீடு: ஐசிசி தகவல்

மும்பை: 50 உலகக்கோப்பை தொடர்பான முக்கிய தகவல் ஜூன் 27ஆம் தேதி வெளியிட உள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.
2011ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் இந்தியாவில் ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. 13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுதொடர்பாக அட்டவணை வெளியிடப்படவில்லை. ஏற்கனவே அகமதாபாத், மும்பை, சென்னை உள்ளிட்ட மைதானங்கள் உலகக்கோப்பைக்காக தயார்ப்படுத்தும் பணிகளின் புகைப்படங்கள் வெளியாகின.
அதேபோல் ஜிம்பாப்வே-யில் உலகக்கோப்பைத் தகுதிச்சுற்றுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த உலகக்கோப்பைத் தொடரும் கடந்த முறை நடத்தப்பட்டது போலவே, ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்படவுள்ளது. இந்த உலகக்கோப்பைத் தொடருக்கு ஏற்கனவே ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றுள்ளன. கடைசி இரு இடங்களுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் தான் தற்போது நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் உலகக்கோப்பைத் தொடர்பான முக்கிய அறிவிப்பு ஜூன் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது. உலகக்கோப்பை அட்டவணை மற்றும் மைதானங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகவே அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனை மும்பையில் உள்ள பிரபல ஹோட்டலில் ஐசிசி மற்றும் பிசிசிஐ மிகப்பெரிய நிகழ்ச்சியாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே பாகிஸ்தான் அணி தரப்பில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுடன் விளையாடப் போகும் மைதானங்கள் மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. பாகிஸ்தானின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் அது ஜூன் 27ஆம் தேதிதான் அதிகாரப்பூர்வமாக தெரிய வரும்.