இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு..!!
இங்கிலாந்து அணிக்கு உலக கோப்பை பெற்று தந்த முன்னாள் கேப்டன் ஈயோன் மோர்கன் அனைத்து வித சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவின் மூலம் தனது ஓய்வு குறித்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்காக 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் முதல் உலக கோப்பையை பெற்று தந்த பெருமைக்குரிய முன்னாள் கேப்டன் ஈயோன் மோர்கன் கடந்த ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இருந்து ஓய்வை அறிவித்த நிலையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அனைத்து வித சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
ஈயோன் மோர்கன் தனது ஓய்வு குறித்து வெளியிட்ட பதிவில், நான் அனைத்து வித சர்வதேச போட்டிகளில் இருந்தும் பெருமையுடன் விடைபெறுகிறேன் என்றார், மேலும் தனது கிரிக்கெட் பயணத்தில் ஒவ்வொரு விளையாட்டு வீரர் வாழ்க்கையிலும் வரும் உயர்வு மற்றும் தாழ்வுகளை தான் சந்தித்த போதெல்லாம் தனக்கு உறுதுணையாக இருந்த தன் குடும்ப உறவுகள், நண்பர்கள், பயிற்சியாளர்கள், சக வீரர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஈயோன் மோர்கன் 126 ஒருநாள் போட்டிகள் மற்றும் 72 டி20 போட்டிகளில் வழிநடத்தி உள்ளார், மேலும் இரண்டு தொடர்களையும் சேர்ந்து இங்கிலாந்து அணிக்கு 118 வெற்றிகளை பெற்று தந்த கேப்டன் என்ற சாதனையை படைத்தார்.இங்கிலாந்து அணிக்காக 2019 ஆம் ஆண்டு முதல் 50 ஓவர் உலக கோப்பையை பெற்று தந்து வரலாற்றில் இடம் பிடித்தார்.
இங்கிலாந்து அணிக்காக 2006 முதல் 2022 வரை விளையாடி மோர்கன் 248 ஒருநாள் போட்டிகளில் 7701 ரன்கள், 115 டி20 போட்டிகளில் 2458 ரன்கள் மற்றும் 16 டெஸ்ட் போட்டிகளில் 700 ரன்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணியின் தலைசிறந்த கேப்டன்கள் பட்டியலில் ஈயோன் மோர்கன் பெயர் என்றும் இடம்பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை.