விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் நிலைமை என்ன.. பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியீடு!!
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சென்ற கார் விபத்தில் சிக்கியதில், அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரது விபத்து மற்றும் சிகிச்சை குறித்து பிசிசிஐ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பிசிசிஐ தனது அறிக்கையில் கூறியுள்ளது பின்வருமாறு :- இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை கார் விபத்தில் சிக்கினார். காயங்களுக்கு அவர் சக்ஷாம் மருத்துவமனை மல்டி ஸ்பெஷாலிட்டி மற்றும் ட்ராமா சென்டரில் அனுமதிக்கப்பட்டார்.
ரிஷப் நெற்றியில் இரண்டு வெட்டுக்கள், வலது முழங்காலில் ஒரு தசைநார் கிழிந்துள்ளது மற்றும் அவரது வலது மணிக்கட்டு, கணுக்கால், கால்விரல் மற்றும் முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டுள்ளன. ரிஷப்பின் நிலை சீராக உள்ளது. அவர் இப்போது டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து காயங்களின் அளவைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. தற்போது ரிஷப்பிற்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களுடன் பிசிசிஐ மருத்துவக் குழு நெருங்கிய தொடர்பில் இருக்கும் நிலையில், பிசிசிஐ ரிஷப்பின் குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது.
ரிஷப் சிறந்த மருத்துவ சிகிச்சையைப் பெறுவதையும், இந்த அதிர்ச்சிகரமான கட்டத்தில் இருந்து வெளிவரத் தேவையான அனைத்து ஆதரவையும் பெறுவதையும் வாரியம் பார்த்துக் கொள்ளும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.