ஆசிய கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு... சாய் சுதர்ஷனுக்கு கிடைத்தது வாய்ப்பு... முழு பட்டியல் இதோ!

மும்பை: வளர்ந்து வரும் வீரர்கள் பங்கேற்க உள்ள ஆசியக் கோப்பைக்கான இளம் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இளம் வீரர்கள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை தொடரானது ஜூலை 13 முதல் 23ஆம் தேதிவரை இலங்கையில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் குரூப் பி பிரிவில் இந்திய ஏ அணி இடம்பெற்றுள்ளது. இந்த பிரிவில் நேபால் ஏ, அமீரகம் ஏ, பாகிஸ்தான் ஏ ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் ஏ பிரிவில் இலங்கை ஏ, வங்கதேசம் ஏ, ஆப்கானிஸ்தான் ஏ, ஓமன் ஏ ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த இரு குழுவிலும் தலா முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் ஜூலை 21, 23 ஆம் தேதிகளில் நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில் பங்கேற்கும். இந்திய ஏ அணி தனது முதல் லீக் போட்டியில் அமீரகம் ஏ அணியை ஜூலை13ஆம் தேதி எதிர்கொள்ள உள்ளது. ஜூலை 15-ல் பாகிஸ்தான் ஏ அணியையும், 18ஆம் தேதி நேபால் ஏ அணியையும் எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில், இத்தொடருக்கான இந்திய ஏ அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணிக்கு கேப்டனாக யாஷ் தூல் சேர்க்கப்பட்டுள்ளளார். துணைக் கேப்டனாக அபிஷேக் ஷர்மா இருக்கிறார். தமிழக வீரர் சாய் சுதர்ஷனும், சக தமிழக வீரர் பிரதோஷ் ரான்ஜன் பௌல் ஆகியோரும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். அதேபோல், சிஎஸ்கே வீரர்கள் ஆகாஷ் சிங், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் ஆகியோரும் இந்திய ஏ அணிகள் இடம்பெற்றுள்ளனர். இந்திய ஏ அணி: சாய் சுதர்ஷன், அபிஷேக் ஷர்மா (துணை கேப்டன்), நிகின் ஜோஸ், பிரதோஷ் ரன்ஜன் பௌல், யாஷ் தூல் (கேப்டன்), ரியான் பராக், நிஷந்த் சந்து, பிரப்சிம்ரன் சிங், துரூவ் ஜூரோல், மனவ் சுதார், யுவ்ராஜ்சிங் தோடியா, ஹர்ஷித் ராணா, ஆகாஷ் சிங், நிதிஷ் குமார் ரெட்டி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்.