டி.என்.பி.எல். கோப்பை யாருக்கு? திருநெல்வேலியில் மல்லுகட்டும் இன்று கோவை- நெல்லை அணிகள்...
![டி.என்.பி.எல். கோப்பை யாருக்கு? திருநெல்வேலியில் மல்லுகட்டும் இன்று கோவை- நெல்லை அணிகள்...](https://www.sportspartans.com/assets/uploads/news-2370.jpg)
நெல்லையில் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நெல்லையில் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 8 அணிகள் இடையிலான தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவையில் கடந்த மாதம் 12-ந் தேதி தொடங்கியது. கோவை, சேலம், நத்தம் (திண்டுக்கல்), நெல்லை ஆகிய இடங்களில் நடந்த லீக் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து பிளே-ஆப் சுற்றை எட்டின. 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், பால்சி திருச்சி அணிகள் முறையே 5 முதல் 8 இடங்களை பெற்று வெளியேறின.
இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி நெல்லை சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) அரங்கேறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்சை எதிர்கொள்கிறது.
லீக் ஆட்டத்தில் நெல்லை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கோவையை வீழ்த்தி இருந்தது. இதனால் நெல்லை அணி நல்ல நம்பிக்கையுடன் களம் காணுவதுடன், சாதகமான உள்ளூர் சூழலை பயன்படுத்தி முதல்முறையாக கோப்பையை கையில் ஏந்த தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன் கடந்த ஆண்டு மழையால் இறுதி ஆட்டம் பாதித்ததால் சேப்பாக் சூப்பர் கில்லீசுடன் இணைந்து கூட்டாக சாம்பியன் பட்டத்தை பகிர்ந்த கோவை அணி மீண்டும் கோப்பையை கைப்பற்ற வரிந்து கட்டும். மொத்தத்தில் இரு அணிகளும் சரிசம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம். இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.