FIFA World Cup 2022 : கடைசி வரை கலங்கடித்த கானா.. ரொனால்டோ உலக சாதனையுடன் போராடி வென்ற போர்ச்சுகல்!!
FIFA World Cup 2022 : பிபா 2022 உலகக்கோப்பையை கண்டிப்பாக வெல்லும் என்ற வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றான போர்ச்சுகல் அணி தனது பிரிவில் இருக்கும் கானா அணியுடன் நேற்று மோதியது. கால்பந்து உலகில் மிகவும் முக்கியமான அணியான போர்ச்சுகல் இதுவரை கால்பந்து உலகக்கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கடைசி கால்பந்து உலகக்கோப்பை போட்டியாக இது இருக்கும் என்றும் தனது அணிக்காக உலகக்கோப்பையை பெற்று தருவார் என்று பெரிதும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
இந்நிலையில், போர்ச்சுகல் அணி தனது முதல் போட்டியில் கானா அணியுடன் தோகா ஸ்டேடியம் 974-இல் விளையாட தொடங்கியது. முன்னதாக, குரூப்-H பிரிவில் நடந்த முதல் போட்டியில் உருகுவே மற்றும் தென் கொரியா அணிகள் மோதின. இந்த போட்டியின் முடிவில் கோல் ஏதும் பதிவாகாமல் ஆட்டம் டிராவில் முடிந்தது.
அதனால் போர்ச்சுகல் மற்றும் கானா அணிகள் தங்கள் பிரிவில் முதல் இடத்தை பிடிக்க முழுவீச்சில் விளையாடினார்கள். போட்டியின் தொடக்கம் முதலே போர்ச்சுகல் வீரர் ரொனால்டோவும் கானா அணி வீரர் அலெக்சாண்டர் டிஜிகுவும் தங்கள் அணிக்காக சிறப்பாக விளையாடினார்கள்.
கானா அணி வீரர்கள் உலகின் சிறந்த அணியான போர்ச்சுகல் அணிக்கு இணையாக தங்கள் முழு திறமையையும் வெளிப்படுத்தினார்கள் என்றே கூறலாம். இதனால் போட்டியின் முதல் பாதி நேரம் வரை கோல் ஏதும் பதிவாகமலே ஆட்டம் நகர்ந்தது.
போட்டியின் இரண்டாவது பாதி தொடங்கியது முதல் போர்ச்சுகல் அணி தங்கள் மிரட்டலான ஆட்டத்தை தொடங்கினார்கள். இதன் விளைவாக போட்டியின் 65-வது நிமிடத்தில் தங்கள் அணிக்கு கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பை கோலாக மாற்றினார் போர்ச்சுகல் அணியின் நட்சத்த்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
மேலும், இதன் மூலம் ஆடவர் கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் 5 தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இந்த உலகக்கோப்பை தொடரில் தான் அர்ஜென்டினா அணிக்காக லியோனல் மெஸ்ஸி நான்கு உலகக் கோப்பையில் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
போர்ச்சுகல் அணியின் கோலுக்கு பிறகு கானா அணியின் வீரர் ஆண்ட்ரூ அய்யூ போட்டியின் 73-வது நிமிடத்தில் ஒரு கோலை அடித்து போட்டியை சமன் செய்தார். இதற்கு பதில் அடியாக போர்ச்சுகல் வீரர்கள் ஜோவோ பெலிக்ஸ் மற்றும் ரபேல் லியோ உடனுக்குடன் தலா ஒரு கோல்களை அடித்து போர்ச்சுகல் அணியை முன்னிலை பெறச் செய்தனர்.
போட்டியின் கடைசி நேரத்தில் ஒஸ்மான் புகாரி கானா அணிக்காக ஒரு கோலை அடித்த போதிலும் ஆட்டத்தின் முடிவில் 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி இந்த உலகக்கோப்பையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. மேலும் கானா அணி வீரர்களின் முயற்சி அனைவராலும் பாராட்டப்பட்டது.