FIFA World Cup 2022 : நெதர்லாந்து அணியின் அசுர ஆட்டம்.. சோகத்தில் கத்தார் அணி ஓட்டம்!!
FIFA World Cup 2022 : உலகக்கோப்பை அரங்கில் குரூப்-எ பிரிவில் நெதர்லாந்து மற்றும் கத்தார் அணிகள் அல்-பேட் மைதானத்தில் மோதினார்கள். நெதர்லாந்து அணி தனது சிறப்பான ஆட்டத்தினால் குரூப்-எ பிரிவில் முதலிடத்தில் உள்ளது. அடுத்த சுற்றான சூப்பர்-16 செல்ல இந்த போட்டியை டிரா அல்லது வெல்லவேண்டிய நிலையில் இருந்தது.
அதே நேரம் கத்தார் அணி உலகக்கோப்பையை விட்டு ஏற்கனவே வெளியேறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் நெதர்லாந்து அணி கத்தார் அணியை எளிதில் வெல்லும் என்று அனைவரும் எதிர்பார்த்தாலும், தொடரை விட்டு வெளியில் செல்லும் கத்தார் அணி தனது முழு பங்களிப்பையும் இன்றைய போட்டியில் காட்டும் என்ற நிலையில் போட்டி தொடங்கியது.
உலககால்பந்து அணிகள் தரவரிசையில் நெதர்லாந்து 8-வது இடத்திலும் கத்தார் அணி 50-வது இடத்திலும் உள்ளது.
இந்நிலையில், போட்டி தொடங்கியது முதல் நெதர்லாந்து அணி சிறப்பாக ஆடியது. இதற்குப் பலனாகப் போட்டியின் 26-வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் டேவி கிளாசன் உதவியுடன் தனது அணிக்காக முதல் கோலை அடித்தார் கோடி காக்போ. இதன்மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணி முன்னிலை பெற்றது.
மேலும் கோடி காக்போ தனது அணிக்காக 3-கோல்களை இந்த தொடரில் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பாதியின் இறுதிவரை கத்தார் அணி சார்பில் எந்த கோலும் அடிக்கப்படாத நிலையில் தொடர்ந்து முன்னிலையிலிருந்தது நெதர்லாந்து அணி.
கத்தார் அணி தங்கள் முழு முயற்சியையும் போட்டியின் இரண்டாவது பாதியில் காட்டினார்கள். இருந்த போதிலும் நெதர்லாந்து அணி வீரர் பிரென்கி டி ஜாங் போட்டியின் 49-நிமிடத்தில் தனது பங்கிற்கு ஒரு கோல் அடித்து நெதர்லாந்து அணியை வெற்றியை உறுதிசெய்தார்.
இறுதிவரை கத்தார் அணி எந்த கோலும் அடிக்காத நிலையில் 2-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணி வென்று, தனது குரூப்-எ பிரிவில் முதலிடம் பெற்று அடுத்த சுற்றான சூப்பர்-16 சுற்றுக்குச் சென்றது. பிபா உலகக்கோப்பை 2022 கால்பந்து போட்டியை நடத்தும் கத்தார் அணி உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் கூட வெற்றிபெறாமல் தொடரைவிட்டு வெளியேறியுள்ளது.