புதிய வரலாறைப் படைத்த மொரோக்கோ அணி… அதிர்ச்சியில் ஸ்பெயின்..!
பிபா உலகக்கோப்பை 2022 "சூப்பர்-16" நாக்கவுட் சுற்றின் நேற்றைய போட்டியில் மொரோக்கோ மற்றும் ஸ்பெயின் அணிகள் அல் ரய்யானில் உள்ள எடுகேஷன் சிட்டி மைதானத்தில் மோதினார்கள். ஸ்பெயின் அணி இந்த உலகக்கோப்பையில் முதல் போட்டியை மிக மிரட்டலாகத் தொடங்கினாலும், ஜப்பான் அணியுடன் தோல்வியடைந்து இரண்டாவது அணியாகவே அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றது. இந்நிலையில் மொரோக்கோ அணியோ தனது பிரிவில் சிறப்பாக அனைத்து போட்டியிலும் விளையாடி முதல் அணியாக அடுத்த நிலைக்குத் தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டி தொடங்கியதும் ஸ்பெயின் அணி வீரர்கள் தங்கள் முழுத்திறமையுடன் ஆட்டத்தை ஆடினார்கள். அவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் மொரோக்கோ அணி வீரர்களும் தங்கள் திறனை வெளிப்படுத்தினார்கள். இதனால் போட்டியின் முதல் பாதி முடியும்வரை இரு அணிகள் சார்பாக எந்த கோலும் பதிவாகவில்லை.
அடுத்தாக போட்டியின் இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் ஸ்பெயின் அணி வீரர்கள் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஆனால் மொரோக்கோ அணியின் சார்பில் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை இருந்ததால் போட்டியின் இறுதி வரை எந்த கோலும் பதிவாகவில்லை. மேலும் கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்திலும் அதே நிலை நீடித்தது. எனவே போட்டியின் முடிவை அறிய பெனால்ட்டி ஷூட்-அவுட் முறையை நோக்கி போட்டி நகர்ந்தது.
அதன் படி, இந்த உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது பெனால்ட்டி ஷூட்-அவுட் நேற்று பதிவானது. ஸ்பெயின் அணிக்கு வழங்கப்பட்ட பெனாலிட்டி வாய்ப்பில் ஸ்பெயின் வீரர்களின் கோல் முயற்சிகளை மொரோக்கோ அணியின் கோல் கீப்பர் "யாசின் பௌனௌ" தடுத்து தனது பணியைச் சிறப்பாகச் செய்தார். மேலும் மொரோக்கோ அணியின் வீரர்கள் அப்தெல்ஹமீத் சபிரி, ஹக்கீம் ஜியேச், அக்ரஃப் ஹக்கிமி ஆகியோர் தங்கள் வாய்ப்புகளில் 3 கோல்களை அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
இதனால் பெனாலிட்டி முறையில் 3-0 என்ற கோல் கணக்கில் மொரோக்கோ அணி ஸ்பெயின் அணியை உலகக்கோப்பை அரங்கில் தோற்கடித்து காலிறுதி போட்டிக்கு முன்னேறியது. மேலும் மொரோக்கோ அணி உலகக்கோப்பை அரங்கில் முதல் முறையாகக் காலிறுதி போட்டிக்குத் தகுதி பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிபா உலகக்கோப்பை 2022-ல் ஸ்பெயின் அணியின் தோல்வியும் மொரோக்கோ அணியின் வெற்றியும் அதிர்ச்சி கலந்த புதிய வரலாற்றைப் படைத்திருக்கிறது.