FIFA World Cup 2022 : அரையிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ் அணி.. இங்கிலாந்து அணி ஏமாற்றம்!!
FIFA World Cup 2022 : பிபா உலகக்கோப்பை 2022-யின் கடைசி காலிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அணிகள் அல் பேட் மைதானத்தில் மோதினார்கள். கடந்த உலகக்கோப்பையின் சாம்பியனான பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே இந்த உலகக்கோப்பையில் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
அது அணிக்குப் பக்கபலமாக இருக்கும். அதேபோல் இங்கிலாந்து அணி சார்பில் கேப்டன் ஹாரி கேன் தனது அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வதை முக்கிய கடமையாக வைத்துள்ளார். அதனால் இரு அணிகளுக்கு இடையிலும் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த போட்டி தொடங்கியதும் இரு அணி வீரர்களும் தங்கள் முழுத்திறனுடன் ஆட்டத்தை விளையாடினார்கள். பிரான்ஸ் அணி வீரர்கள் தொடர்ந்து பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் தான் வைத்திருந்தனர்.
அதற்குப் பதிலடியாக இங்கிலாந்து அணியின் வீரர்களும் இணையான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் போட்டியின் 17-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் ஆரேலியன் டிச்சௌமேனி தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஒரு கோலை அடித்தார். இந்நிலையில், முதல் பாதியின் முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி முன்னிலைப் பெற்றது.
அடுத்தாக போட்டியின் இரண்டாவது பாதி தொடங்கியவுடன் தங்கள் அணிக்கான முதல் கோல் வாய்ப்பை நோக்கிப் பரபரப்புடன் விளையாடினார்கள் இங்கிலாந்து அணியின் வீரர்கள். எனவே போட்டியின் 54-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்குக் கிடைத்த பெனாலிட்டி வாய்ப்பை கோலாக மாற்றினார் அணியின் கேப்டன் ஹாரி கேன். அதன்மூலம் 1-1 என்று போட்டி சமநிலையில் சென்றது.
அடுத்தாக போட்டியின் 78-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் ஆலிவர் ஜிரோட் ஒரு கோலை அடித்தார். அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்குக் கிடைத்த பெனாலிட்டி வாய்ப்பை இந்தமுறை கோலாக மாற்றத் தவறினார் அணியின் கேப்டன் ஹாரி கேன். இந்நிலையில் இறுதிவரை இங்கிலாந்து அணி சார்பில் கூடுதல் கோல் ஏதும் பதிவாகாத நிலையில் பிரான்ஸ் அணி உலகக்கோப்பை காலிறுதியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.
கடந்த உலகக்கோப்பை சாம்பியனான பிரான்ஸ் அணி இந்த உலகக்கோப்பை தொடரிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேறியது. மேலும் அரையிறுதியில் பிரான்ஸ் அணி மொரோக்கோ அணியுடன் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.