FIFA World Cup 2022 : அபார வெற்றி.. தென்கொரியாவை தெறிக்க விட்ட பிரேசில்!!
FIFA World Cup 2022 : பிபா உலகக்கோப்பை 2022 "சூப்பர்-16" நாக்கவுட் சுற்றின் 6-வது போட்டியில் பிரேசில் மற்றும் தென்கொரியா அணிகள் மைதானம் 974-ல் விளையாடினார்கள்.
ஐந்துமுறை கால்பந்து உலக சாம்பியனான பிரேசில் அணி இந்த நாக்அவுட் சுற்றை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்றும்,மேலும் காயத்தில் இருந்து மீண்ட பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் இந்த போட்டியில் பங்கேற்கப்போவதாலும் ,தென்கொரியா அணியைப் பிரேசில் அணிக்கு எதிராக எப்படி சன்- ஹியுங்-மின் வழிநடத்தப் போகிறார் என்றும் அதிக எதிர்பார்ப்புகள் நிலவியதால், இந்த போட்டி பல கால்பந்து ரசிகர்களை இந்த போட்டி கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே உலகக்கோப்பை அரங்கை அதிரவைத்தனர் பிரேசில் அணியினர். பிரேசில் அணி வீரர் வினிசியஸ் ஜூனியர் போட்டியின் 7-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். அவரை தொடர்ந்து போட்டியின் 13-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் பெனாலிட்டி வாய்ப்பை கோலாக மாற்றினார்.
இதன் மூலம் இவர் பிரேசில் அணிக்காக 76-கோல்களை அடித்துள்ளார். பிரேசில் அணியின் ஜாம்பவான் பீலே விட ஒரு கோல் தான் குறைவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தாக போட்டியின் 29-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் ரிச்சர்லிசன் ஒரு கோல் அடித்தார்.
அவரை தொடர்ந்து போட்டியின் 36-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் லூகாஸ் பக்கெட்டா ஒரு கோல் அடித்தார். போட்டியின் முதல் பாதியின் முடிவில் 4 கோல்களை அடித்து பிரேசில் அணி தென் கொரியா அணியை மிரட்டியது.
இந்த போட்டியில் மிகவும் பின் தங்கிய நிலையிலிருந்த தென்கொரியா அணி தனது முதல் கோலுக்கான வாய்ப்பை தேடியது. இதனால் போட்டியின் 76-வது நிமிடத்தில் தென் கொரியா அணியின் வீரர் பைக் சியுங்-ஹோ தனது அணிக்கான முதல் மற்றும் ஆறுதல் கோலை அடித்தார். இறுதியாகப் போட்டியின் முடிவில் 4-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வெற்றி பெற்றது.
இந்த உலகக்கோப்பையில் தென் கொரியா அணியின் பயணம் இந்த தோல்வியின் மூலம் முடிவுக்கு வந்தது. பிரேசில் அணி இந்த மாபெரும் வெற்றியின் மூலம் உலகக்கோப்பை தொடரை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றது என்றே கூறலாம்,மேலும் காலிறுதியில் பிரேசில் அணி குரோஷியா அணியைச் சந்திக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.