ஜஸ்ட் 951 கோடி ரூபாய் தான்.. ஐபிஎல் மீடியா உரிமையை கைப்பற்றியது வயாகாம்!!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) செயலாளர் ஜெய் ஷா, ஒளிபரப்பு நிறுவனமான வயாகாம் (Viacom 18) மகளிர் இந்தியன் பிரீமியர் லீக் (WIPL) ஒளிபரப்பு உரிமையை ரூ.951 கோடிக்கு வென்றுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் வயாகாம் ஐந்தாண்டுகளுக்கு மகளிர் ஐபிஎல்லை ஒளிபரப்பும். தற்போதைய நிலவரப்படி, மகளிர் ஐபிஎல்லில் ஒரு போட்டியின் மதிப்பு ரூ.7 கோடிக்கும் அதிகமாக உள்ளது.
இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்ட ட்வீட்டில், "மகளிர் ஐபிஎல் ஊடக உரிமைகளை வென்றதற்கு வயாகாமிற்கு வாழ்த்துக்கள். பிசிசிஐ மீதான உங்கள் நம்பிக்கைக்கு நன்றி. வயாகாம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு (2023-27) ஒரு போட்டியின் மதிப்பான ரூ.7.09 கோடிகள் அதாவது ரூ.951 கோடிகளை வழங்கியுள்ளது. மகளிர் கிரிக்கெட்டுக்கு இது மிகப்பெரியது." என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, டிசம்பரில் விற்பனைக்கு விடப்பட்ட டெண்டர் ஆவணத்தை எட்டு ஏலதாரர்கள் வாங்கியுள்ளனர். 2023-27க்கு இடைப்பட்ட ஐந்தாண்டு கால அளவில் உரிமைகள் மூன்று வகைகளை உள்ளடக்கியது: நேரியல் (டிவி), டிஜிட்டல் மற்றும் ஒருங்கிணைந்த (டிவி மற்றும் டிஜிட்டல்). இந்தியா உட்பட உலகளவில் உரிமைகள் விற்கப்பட்டன.
மகளிர் ஐபிஎல் தற்போது தான் முதல் முறையாக தொடங்கப்படுகிறது என்பதால், அதன் மதிப்பை சந்தை தீர்மானிக்க வேண்டும் என முடிவு செய்த பிசிசிஐ, ஏலத்திற்கு அடிப்படை விலையை நிர்ணயிக்கவில்லை. ஆனால் 951 கோடி ரூபாய் என்பது பிசிசிஐயே எதிர்பார்க்கவில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே மகளிர் ஐபிஎல்லில் பங்கேற்கும் அணிகள் குறித்த விபரங்களை வரும் ஜனவரி 25 ஆம் தேதி வெளியிட பிசிசிஐ முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.