பேர்ஸ்டோவை விதிகளின் படியே வீழ்த்தி இருக்கிறோம்: பேட் கம்மின்ஸ்

லண்டன்: கிரிக்கெட் விதிகளின்படியே பேர்ஸ்டோவை அலெக்ஸ் கேரி ரன் அவுட் செய்துள்ளதாகவும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் விளக்கமளித்துள்ளார்.
கிரிக்கெட்டை பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணி வெற்றிபெறுவதற்காக எந்த எல்லை வரையும் செல்வார்கள். இன்னும் சொல்லப்போனால் மோசடி செய்துகூட வெற்றி பெற முயற்சிப்பார்கள். அதற்கு தென்னாப்பிரிக்காவில் பந்தை பழுதாக்கியதே சாட்சி. தற்போதும் ஆஷஸ் தொடரிலும் அப்படியான சம்பவத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஈடுபட்டனர்.
ஆஸ்திரேலிய அணியால் நிர்ணயிக்கப்பட்ட 371ரன்கள் என்ற இலக்கை பென் ஸ்டோக்ஸ் உடன் இணைந்து பேர்ஸ்டோவ் விரட்டி வந்தார். அப்போது 51வது ஓவரின் கடைசி பந்தில் பேர்ஸ்டோவுக்கு ஷார்ட் பால் வீசப்பட்டது. அதனை பேர்ஸ்டோவ் அடிக்க முயற்சிக்காமல் குனிந்து கொண்டார். இதையடுத்து பந்து விக்கெட் கீப்பரிடம் சென்றபோது, அவர் கிரீசை விட்டு வெளியே வந்தார்.
இதை பார்த்த அலெக்ஸ் கேரி பந்தை ஸ்டம்பில் அடித்து ரன் அவுட் செய்தார். இதனையடுத்து ஆஸ்திரேலிய வீரர்கள் நடுவரிடம் அவுட் என்று முறையிட, மூன்றாம் நடுவரின் முடிவுக்கு தீர்ப்பு கொண்டு செல்லப்பட்டது. இதன்பின்னர் மூன்றாம் நடுவர், அவுட் என்று முடிவை அறிவிக்க, cheaters என்ற குரல்கள் ரசிகர்களிடையே எழுந்தது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் பேசுகையில், பேர்ஸ்டோவை பந்து கடந்தபின், எந்தவிதமான காத்திருப்பும் இல்லாமல் அவர் கிரீசை விட்டு வெளியேறுவதை சில பந்துகளுக்கு முன்பாக அலெக்ஸ் கேரி பார்த்துவிட்டார் என்று நினைக்கிறேன். அதன் காரணமாகவே அந்த பந்தில் சரியாக ரன் அவுட் செய்தார். என்னை பொறுத்தவரை அது 100 சதவிகிதம் சரியான ஆட்டம்தான். விதிகளும் அப்படிதான் சொல்கின்றன.
இது விதியை சிலரால் ஏற்றுக் கொள்ள முடியாது. 4ஆம் நாளில் பிடிக்கப்பட்ட கேட்சை போலவே இதுவும் விதிகளின் படியே உள்ளது. அப்படிதான் நாங்களும் பார்க்கிறோம். பென் ஸ்டோக்ஸ் களத்தில் இருக்கும் எங்களுக்கு முழுமையான பதற்றத்தை கொடுத்துவிட்டார். பிட்ச்சில் எந்த உதவியுமில்லை. அதனால் எங்களின் திட்டம் ஷார்ட் பால்களை வீசுவதாக மட்டுமே அமைந்தது. 2-0 என்று ஆஷஸ் தொடரில் முன்னிலையில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்தார்.