இந்திய அணியின் மிஸ்டர்.360 நிகழ்த்த உள்ள புதிய சாதனை..! ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!
இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக எதிரணிகளை மிரட்டி வரும் சூர்யா குமார் யாதவ், ஐ.சி.சி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார்.தனது அதிரடியான பார்மில் இருக்கும் சூர்யா குமார் தொடர்ந்து பேட்டிங்கில் அசத்தி வருவதால் புதிய சாதனை ஒன்றை இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியில் முக்கியமான டி20 பேட்ஸ்மேன் என்ற அவதாரத்தை தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் சூர்யா குமார் யாதவ் பெற்றுள்ளார்.கடைசியாக இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் இலங்கை அணியின் பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய சூர்யா 51 பந்துகளில் 9-சிக்ஸர்கள் , 7-பவுண்டரிகள் உட்பட 112 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த 2-1 என்ற நிலையில் இந்திய அணி தொடரை கைப்பற்ற உதவினார்.
மேலும் அவர் 45 பந்துகளில் 100 ரன்களை அடித்து டி20 தொடரில் தனது 3-வது சதத்தை பதிவு செய்தார்,நம்பர்-4 பேட்ஸ்மேனாக களமிறங்கி அதிக சதங்கள் பதிவு செய்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.மேலும் ஐசிசி தரவரிசையில் சூரியகுமார் யாதவ் 883 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
கடைசியாக நடந்த டி20 தொடரில் சூர்யா குமார் யாதவ் சதம் அடித்து உள்ளதால், அடுத்த ஐசிசி வெளியிடும் டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் சூரிய குமார் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பார், மேலும் அவரது டி20 ரேட்டிங் 900 புள்ளிகளை அடைய வாய்ப்புள்ளது.
அப்படி சூர்யா குமார் யாதவ் டி20 தரவரிசையில் 900 புள்ளிகள் பெற்றால், அந்த சாதனையை படைக்கும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அடைவார்.இதுவரை இங்கிலாந்து அணியின் டேவிட் மாலன் மற்றும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் ஆகிய இருவர் தான் இந்த சாதனையை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்காக கடந்த 2021-ஆம் ஆண்டு தனது 31-வயதில் சர்வதேச அளவில் களமிறங்கிய சூர்யா குமார் யாதவ் தனது தொடக்கத்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை தான் வெளிப்படுத்தி உள்ளார், கடந்த 6 மாதங்களில் மட்டும் 3 சதங்கள் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியிலும் சூர்யா குமார் இந்த ஆட்டத்தை தொடர்ந்தால் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு பெரிய பலமாக இருக்கும் என்று ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.