இந்தியாவின் மிஸ்டர் 360.. புது அவதாரம் எடுத்த சூர்யகுமார் யாதவ்!!
ஜிம்பாப்வேக்கு எதிரான இந்தியாவின் ஆட்டத்தின் போது சூர்யகுமார் யாதவின் ஷாட் தேர்வை இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பாராட்டினார். சூர்யகுமார் யாதவ் தனது 25 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.
சூர்யகுமாரின் அற்புதமான பேட்டிங் டிஸ்பிளேக்காகப் பாராட்டிய கவாஸ்கர், “அந்த இன்னிங்ஸ் ஒவ்வொன்றும் 360 டிகிரியில் இருந்தது. அவர்தான் புதிய மிஸ்டர்.360 பட்டத்திற்கு உரியவர். அந்த ஒரு ஷாட் விக்கெட் கீப்பரின் இடதுபுறத்தில் சிக்ஸருக்கு அடித்தது. பின்னர் அவர் இறுதி ஓவர்களில் ஆடிய ஆட்டம், உதாரணமாக, பந்து வீச்சாளர் குறிவைக்க முயன்ற கோணத்தைப் பயன்படுத்திக் கொண்டார்.
அவர் உண்மையில் எளிதில் எட்ட முடியாத ஸ்கோரை பெற இந்திய அணிக்கு உதவி வருகிறார். இது தான் எம்சிஜியில் இந்தியா பெற்ற அதிகபட்ச டி20 ஸ்கோராகும். அவர் ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் இல்லாமல் இருந்திருந்தால், இந்தியா 150 ரன்களைக் கூட எட்டியிருக்காது.” என்று கூறினார்.
225 ரன்களுடன், சூப்பர் 12 கட்டத்தில் மட்டுமே போட்டியிட்ட வீரர்களுக்கான போட்டிகளின் ரன் பட்டியலில், யாதவ் இப்போது சக வீரர் விராட் கோலிக்கு (246) அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார். மேலும் சூர்யகுமார் யாதவ், இந்த ஆண்டு 28 இன்னிங்ஸ்களில் 44.60 சராசரியுடன் 1,026 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சாதம் மற்றும் 9 அரைசதங்களும் அடங்கும். அவரது சிறந்த ஸ்கோர் 117. அவரது ஸ்ட்ரைக் ரேட் 186.24.
32 வயதான இவர் முகமது ரிஸ்வானுக்கு பிறகு ஒரு காலண்டர் ஆண்டில் 1,000 ரன்களை கடந்த வீரர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார். முன்னதாக கடந்த ஆண்டு 1,326 ரன்களை எடுத்ததன் மூலம் ரிஸ்வான் இந்த சாதனையை செய்திருந்தார்.
இதற்கிடையில், மிஸ்டர் 360 என்று அழைக்கப்படும் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸும் சூர்யாவின் பேட்டிங் திறமையை ஒப்புக்கொண்டு, சூர்யகுமாரை பாராட்டி ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். எனினும் தன்னை மிஸ்டர் 360 ஆன டி வில்லியர்ஸுடன் ஒப்பிடும் அளவுக்கு இன்னும் வளரவில்லை என்றும், டி வில்லியர்ஸ் போல விளையாட முயற்சிக்கிறேன் என்று தன்னடக்கத்துடன் சூர்யகுமார் தெரிவித்துள்ளார்.