இரட்டை சதம் அடித்த இளம் இந்திய வீரர் ஆனார் சுப்மன் கில்…! பல சாதனைகள் படைத்து அசத்தல்..!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் பொறுப்புடன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணி ஒரு நல்ல இலக்கை அடைய உதவினார்.
இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் முழு வீச்சில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது, அணியின் முன்னணி வீரர்கள் எல்லாம் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இளம் வீரர் சுப்மன் கில் பொறுப்புடன் விளையாடி ஒருநாள் போட்டியில் தனது 3 வது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.
இந்த போட்டியில் ஆரம்பம் முதல் இறுதிவரை விளையாடிய தொடக்க வீரர் சுப்மன் கில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்து அரங்கத்தை அதிர வைத்தார், மேலும் 23 வயதான கில் இரட்டை சதம் அடித்த இளம் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்திய அணி சார்பில் தனி ஒருவனாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கில் இறுதி ஓவரில் ஆட்டமிழந்தார்.
இந்த போட்டியில் சுப்மன் கில் 9 சிக்ஸர்கள் மற்றும் 19 பௌண்டர்கள் உட்பட 208(149) ரன்களை அடித்து அசத்தினார்,இவரின் முயற்சியால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 349 ரன்களை குவித்தது.நியூசிலாந்து அணி சார்பில் டேரில் மிட்செல் மற்றும் ஹென்றி ஷிப்லி இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்திய அணி சார்பில் தொடக்க வீரர் இடத்தில் நம்பிக்கையாக களமிறக்கப்பட்ட இளம் வீரர் சுப்மன் கில் தொடர்ச்சியான அதிரடி ஆட்டத்தால் அனைவருக்கும் தனது திறனை நிரூபித்து காட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் உட்பட பலரும் சுப்மன் கில் இன்னிங்ஸை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.