"எனது வெற்றிக்கு காரணம் இவர்கள் தான்" மனம் திறந்த சுப்மன் கில்..!
இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கி அண்மையில் பல அதிரடிகளை நிகழ்த்தி வரும் சுப்மன் கில், நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.அதன்பின் மனம் திறந்து பேசிய கில் தனது கிரிக்கெட் பயணத்தில் முக்கிய தருணம் ஒன்றை பகிர்ந்து கொண்டார்.
இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளை பெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அணியின் வீரர்களின் மகத்தான பங்களிப்பு என்று கூறினால் மிகையில்லை, குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு எதிராக தனி ஒருவனாக நின்று அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றவர் இளம் வீரர் சுப்மன் கில் ஆட்டத்தை யாரும் மறக்க முடியாது.
இந்த போட்டியில் இரட்டை சதம் அடித்த இளம் இந்திய வீரர் என்ற சாதனையை கில் படைத்தார்,அதன்பின் ஒரு வெற்றியாளராக இன்று உங்கள் முன்னால் நான் நிற்பதற்கு முக்கிய காரணம் எனது தந்தையும் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கும் தான் என்று கில் பதிவு செய்தார்.
இது குறித்து பேசிய சுப்மன் கில் தற்போது நான் இருக்கும் நிலைக்கு முக்கிய காரணம் 2020 ஆம் ஆண்டு பேரிடர் காலத்தில் தனது கிரிக்கெட் பயணத்தில் முக்கிய மாற்றம் தான். அந்த சமயத்தில் தனது கிரிக்கெட் தரத்தை மேம்படுத்தும் வகையில் தனது தந்தை மற்றும் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் ஆகிய இருவரும் அளித்த பயிற்சி தான் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க காபா டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 91 ரன்கள், அதன்பின் 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக ஏலத்தில் வாங்கப்பட்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் மீண்டும் கால் பதித்து தற்போது இரட்டை சதம் அடிக்கும் நிலைக்கு எனது ஆட்டத்தின் திறன் மேம்பட்டதற்கு எனது தந்தை மற்றும் ஆசானாக இருந்த யுவராஜ் சிங் இருவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று கில் பதிவு செய்தார்.
சுப்மன் கில் பகிர்ந்த இந்த சம்பவத்தை அறிந்த கிரிக்கெட் ரசிகர்கள் உட்பட பல கிரிக்கெட் நிபுணர்களும் நீங்கள் பல சிக்ஸர்களை பறக்கவிட்ட பொழுது அதில் யுவராஜ் சிங்கின் நினைவு எங்கள் கண் முன்னே வந்து சென்றது என்று இணையத்தில் பதிவிட்டு தங்களின் மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.