இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்.. அர்ஜுன் குறித்து சச்சின் டெண்டுல்கர் உருக்கம்!!
இந்தியாவில் உள்நாட்டுத் தொடர்களில் முக்கிய ஒன்றான ரஞ்சி டிராபி(2022-2023) தொடர் ஆரம்பித்து நடந்து வருகிறது. அதில் கோவா அணிக்காக முதல் முறை களமிறங்கி விளையாடி வரும் சச்சின் டெண்டுகரின் மகன் அர்ஜுன் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார்.
கிரிக்கெட் உலகின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தனது முதல் ரஞ்சி டிராபி ஆட்டத்தில் சதம் அடித்தார். எனவே தந்தை போல் மகனும் தனது முதல் போட்டியில் சதம் அடித்து அசதியுள்ளது கிரிக்கெட் வட்டாரங்களில் முக்கிய செய்தியாகப் பேசப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து தனது மகனின் சிறப்பான ஆட்டத்தைப் பற்றி சச்சின் டெண்டுல்கரிடன் கேட்ட பொழுது, அவர் தனது வாழ்க்கையில் நடந்த நெகிழ்ச்சியான தருணத்தைப் பகிர்ந்தார். சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த காலகட்டத்தில் தனது தந்தையின் நண்பர் ஒருவர் அவரை, இவர் தான் சச்சின் டெண்டுல்கரின் தந்தை என்று சிலரிடம் அறிமுகப்படுத்தினார்.
அந்த தருணம் தான் எனது தந்தையின் வாழ்வில் மறக்க முடியாத பெருமையான தருணம் என்று எனது தந்தை கூறி மகிழ்வார் என்றும் இப்பொழுது நான் அந்த தருணத்தில் அவர் பெற்ற மகிழ்ச்சியை உணர்கிறேன் என்றும் கூறினார்.
மேலும் சச்சின் தனது மகனின் வாழ்க்கை சராசரி குழந்தைகளின் வாழ்க்கையைப் போல் இருந்தது இல்லை என்றார். ஏனென்றால் கிரிக்கெட் உலகத்தில் எனது பயணத்தை எப்பொழுது அர்ஜுன் தொடரப் போகிறார் என்ற கேள்வியும் அழுத்தமும் எனது ஓய்விலிருந்தே அவருக்கு இருந்து வந்தது.
ஒரு தந்தையாக நான் அர்ஜுனுக்கு எப்பொழுதும் வழங்கும் அறிவுரை ஒன்று தான், எனது கிரிக்கெட் பயணத்தில் எந்த நேரத்திலும் எனக்கு எந்த வித அழுத்தமும்,எதிர் பார்ப்பும் இருந்ததில்லை ,ஆனால் உனக்கு இவை அனைத்தும் இருக்கிறது நீ அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு விளையாட வேண்டும் என்று கூறியதாக அவர் பதிவு செய்தார்.