தோல்வி அடையும் போது எப்படி இருக்கணும்னு எங்களுக்கு நிறைய கற்றுத் தந்தாரு - தோனி குறித்து ருத்துராஜ் நெகிழ்ச்சி..
இந்தியாவின் உள்-நாட்டுப் போட்டிகளில் ஒன்றான விஜய்-ஹசாரே டிரோபி தற்போது நடந்து வருகிறது. இந்த தொடரில் மட்டும் பல புதிய சாதனைகளை வீரர்கள் பதிவு செய்து வருகிறார்கள், குறிப்பாகத் தமிழக அணியின் நாராயணன் ஜெகதீசன் தொடர்ச்சியாக இந்த தொடரில் ஐந்து சதங்களை அடித்து ஒரு சாதனையைப் படைத்தார்,மேலும் தமிழக அணி ஒரு போட்டியில் அருணாச்சலப்பிரதேஷ் அணிக்கு எதிராக 506 ரன்களை அடித்து லிஸ்ட் -எ பிரிவில் 500 ரன்களை அடிக்கும் முதல் அணி என்ற சாதனையையும் படைத்தது.
இந்த வரிசையில் நேற்றைய ஆட்டத்தில் மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேஷ் அணிகள் மோதின. இந்த போட்டியில் மகாராஷ்டிரா அணியின் கேப்டன் "ருதுராஜ் கெய்க்வாட்" ஒரே ஓவரில் 7-சிக்ஸ்களை அடித்து புதிய சாதனையைப் படைத்தார். உத்தரப்பிரதேச அணியின் பௌலர் சிவா சிங் வீசிய (6-பந்து, 1-நோ-பால்) ஓவரில் 7-சிக்ஸ்களை அடித்து இந்த புதிய சாதனையைப் படைத்தார். இந்த சாதனை அனைத்து கிரிக்கெட் ரசிகர்களால்
கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஒரு நிகழ்வைப் பதிவுசெய்துள்ளார். அந்த விடியோவும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ருதுராஜ் கெய்க்வாட் ஆகாஷ் சோப்ராவுடன் நடந்த நேர்காணலில் சர்வதேச போட்டிகளில் இந்தியாவின் நிலை குறித்த உரையாடலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நடந்த ஒரு நிகழ்வைப் பகிர்ந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் "மகேந்திர சிங் தோனி" ஒவ்வொரு போட்டியின் முடிவில் தோற்றாலும் ஜெயித்தாலும் அணியை சமமான நிலையில் தான் வைத்திருப்பார்.
குறிப்பாக ஒரு போட்டியில் நாங்கள் தோல்வியைத் தழுவினால் நான் உட்பட மற்ற வீரர்கள் எல்லாம் சோகத்தில் அமைதியாக இருப்போம். ஆனால் போட்டி முடிந்தவுடன் தோனி பாய் உள்ள வந்து "நடந்தது நடந்து விட்டது ரிலாக்ஸாக இருங்கள்" என்பார். மேலும் நாம் இந்த போட்டியில் தோற்றதால் நம் விளையாட்டைக் குறைகூறி எதுவும் ஆகப் போவதில்லை என்பார். இதுபோல பல தருணங்களில் எப்படி அமைதியாகக் கையாளவேண்டும் என்று டோனி அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன் என்று "ருதுராஜ் கெய்க்வாட்" பேசிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.