தலைமை பயிற்சியாளர் நீக்கம்.. புதிய பயிற்சியாளரை நியமித்து பிசிசிஐ அதிரடி உத்தரவு!!
தற்போதைய இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரமேஷ் பவார் அங்கிருந்து நீக்கப்பட்டு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு (என்சிஏ) அனுப்பப்பபட்டுள்ளார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதே போல் இந்திய மகளிர் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக ஹிருஷிகேஷ் கனிட்கரை பிசிசிஐ நியமித்துள்ளது.
இன்று பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், வழக்கமான பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் இல்லாத நிலையில், நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்காக இந்திய ஆடவர் அணியுடன் பயணித்த ஹிருஷிகேஷ் கனிட்கர், வரும் ஆஸ்திரேலியாவுடன் இந்திய மகளிர் அணி விளையாட உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு முன்னதாக இந்திய அணியில் இணைய உள்ளார்.
ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவை ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் உள்நாட்டில் விளையாட உள்ளது. இதன் முதல் போட்டி டிசம்பர் 9 ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது.
கனிட்கர் இந்திய மகளிர் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது ஒரு கெளரவம் என்று கூறினார். அதே நேரத்தில் ரமேஷ் பவார் மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, விவிஎஸ் லக்ஷ்மனின் பயிற்சியின் கீழ் தேசிய கிரிக்கெட் அகாடெமியில் சேருவார்.
இது சமீபத்தில் பிசிசிஐ திட்டமிட்டுள்ள மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.