எங்களால் தான் கோலி நீக்கப்பட்டார்.. பதவியிலிருந்து நீக்கப்பட்டும் அடங்காத பாக். கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர்!!
பென் ஸ்டோக்ஸின் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0-3 என்ற படுதோல்விக்கு பிறகு, பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் தொடர்ச்சியான மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில் முதல் மாற்றமாக, இங்கிலாந்து தனது சொந்த தொடரில் பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்த ஒரு நாள் கழித்து, பிசிபி தலைவர் பதவியில் இருந்து ரமீஸ் ராஜா நீக்கப்பட்டார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், ரமீஸ் ராஜாவுக்குப் பதிலாக நஜாம் சேத்தியை நியமித்தார். அவர் பாகிஸ்தான் ஆடவர் சர்வதேச அணியின் இடைக்கால தலைமை தேர்வாளராக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிடியை நியமித்தார்.
அப்ரிடி வந்தவுடன், ரிஸ்வானுக்குப் பதிலாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவை தெரிவுக்குழுவில் கொண்டு வந்தார். ஷாஹித் அப்ரிடியின் இடைக்காலத் தேர்வுக் குழுவில் அப்துல் ரசாக் மற்றும் ராவ் இப்திகார் அஞ்சும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரின் போது, ரமீஸ் ராஜா வெளியேறுவதாக வதந்திகள் வந்தன. ஆனால் அவர் அதை தொடர்ந்து மறுத்து வந்தார். பாகிஸ்தான் கிரிக்கெட்டை ஒரு பிராண்டாக தான் தான் மாற்றினோம் என்ற எண்ணத்தில் இருந்த ரமீஸ் ராஜா இறுதியாக நீக்கப்பட்டார்.
இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம். அதனால் தானோ என்னவோ, அதை ஜீரணிக்க முடியாமல் தற்போதுவரை செல்லும் இடமெல்லாம், பாகிஸ்தானின் கிரிக்கெட்டை தான் மாற்றியமைத்ததையும், வெள்ளை-பந்து கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் எழுச்சியையும் குறிப்பிட்டு வருகிறார்.
மேலும், இந்தியா மீதும் இந்திய கிரிக்கெட் வாரியம் மீதும் தொடர்ந்து காழ்ப்புணர்ச்சியுடன் பேசி வரும் ரமீஸ் ராஜா, இந்திய கிரிக்கெட் அமைப்பை மொத்த மாற்றங்களைச் செய்ய பாகிஸ்தான் தான் கட்டாயப்படுத்தியது என்று சொல்லும் அளவுக்குச் சென்றார்.
இது தொடர்பாக ரமீஸ் ராஜா கூறியது பின்வருமாறு :- பிசிபி (பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்) தலைவராக நான் இருந்த காலத்தில், வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அந்த அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நாங்கள் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடினோம், ஆனால் இந்தியா விளையாடவில்லை.
இந்தியா போன்ற பில்லியன் டாலர் தொழில்துறையை கொண்டவர்களை நாம் மிகவும் பின்தங்க செய்து விட்டோம். இது அவற்றின் கட்டமைப்பில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. 2021 டி 20 உலகக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு அவர்கள் தங்கள் தேர்வுக் குழுவை நீக்கினர். அவர்கள் தங்கள் கேப்டன் விராட் கோலியை நீக்கினர்.
பிசிசிஐ-யால் பாகிஸ்தானிடம் பெற்ற தோல்வியை ஏற்றுக்கொண்டு ஜீரணிக்க முடியவில்லை. நான் பாபர் அசாமுக்கு அதிகாரம் அளித்தேன், அதன் செயல்பாட்டில், பாகிஸ்தான் கிரிக்கெட்டை ஒரு பிராண்டாக மாற்றுவதில் எனது பதவிக்காலத்தில் நாங்கள் வெற்றிகரமாக இருக்க முடிந்தது என்று கூறுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ரமீஸ் ராஜா இந்தியா குறித்து பேசுவது மட்டுமல்லாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் மற்றும் தற்போதைய தலைவர் நஜாம் சேத்தியையும் கடுமையாக விமர்சித்ததுள்ளார். இதனால் பிசிபி தற்போது அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.