ஐ.பி.எல் 2023: இதை பண்ணா தான் உங்களுக்கு நல்லது.. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு முன்னாள் பயிற்சியாளர் அட்வைஸ்..!
IPL 2023 : ஐ.பி.எல் தொடரின் 16-வது சீசன் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நிலையில், அதற்கு முன்னர் தொடரில் கலந்து கொள்ளும் அணிகளில் உள்ள காலி இடங்களை நிரப்ப வரும் டிசம்பர்-23 ஆம் தேதி கொச்சியில் மினி ஏலம் நடக்கவுள்ளது.
பஞ்சாப் அணி ஐ.பி.எல் தொடரில் பலமுறை சிறந்த பங்களிப்பை அளித்தும் முக்கிய போட்டிகளில் சொதப்பியதால் இதுவரை ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை.
இந்நிலையில் மினி ஏலத்தில் கலந்து கொள்ளும் முன்னர் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் தங்களின் கருத்துக்கள் மூலம் அணிகளின் நிறை குறைகளை விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளரான அனில் கும்ப்ளே பஞ்சாப் அணிக்காக தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
இந்த தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியை ஷிகர் தவான் கேப்டனாக இருந்து வழிநடத்தவுள்ளார். மேலும் அணியின் புதிய பயிற்சியாளராக ட்ரெவர் பேலிஸ் செயல்படவுள்ளார்.
இந்நிலையில் அனில் கும்ப்ளே நடக்கவிருக்கும் மினி ஏலத்தில் வெளிநாட்டு ஆல்ரவுண்டர்களாகிய கேமரூன் கிரீன், பென் ஸ்டோக்ஸ் அல்லது சாம் கர்ரன் இவர்களில் யாராவது ஒருவரை வாங்கினால் பஞ்சாப் கிங்ஸ் அணிக்குப் பக்கபலமாக இருக்கும் என்று கூறினார்.
மேலும் அனில் கும்ப்ளே, வெளிநாட்டு ஆல்ரவுண்டர்களில் கேமரூன் கிரீன் பஞ்சாப் அணிக்கு மிகவும் சிறப்பாகப் பயன்படுவார் என்றார். இவரது அசத்தலான பௌலிங்கும், அதிரடியான பேட்டிங்கும் பஞ்சாப் அணிக்குப் பல நேரங்களில் உதவும் என்றார்.
பஞ்சாப் அணி தங்களின் வெளிநாட்டு ஆல்ரவுண்டர் ஒடியன் ஸ்மித்தை அணியிலிருந்து ஏலத்திற்கு முன் விடுவித்த நிலையில், கேமரூன் கிரீன் அந்த இடத்தை கட்சிதமாக நிரப்புவார் என்று கூறினார்.
பஞ்சாப் கிங்ஸ் அணி கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல் தொடரில் மயங்க் அகர்வால் தலைமையில் சரியாக விளையாடாத நிலையில், இந்த முறை புதிய கேப்டன் மற்றும் புதிய பயிற்சியாளருடன் பங்கேற்க உள்ளது.
இந்த தொடரில் சிறப்பாக பங்களிக்க நடக்கவிருக்கும் ஏலத்தில் புதிய அனுபவ வீரர்களை வாங்க ஆயத்தமாக உள்ளது. மேலும் பஞ்சாப் அணியின் கையிருப்பில் 32.2 கோடி உள்ள நிலையில் அணியில் மீதம் உள்ள 12 இடங்களை ஏலத்தின் மூலம் நிரப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.