ஒருநாள் தொடரில் உச்சம் தொடப்போகும் இந்திய அணி..! உலக கோப்பை பயணத்தில் வலுக்கும் நம்பிக்கை..!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ள 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றினால் ஐசிசி ஒருநாள் அணிகள் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தை பிடிக்கும் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து பௌலர்கள் நியூசிலாந்து அணியை துவம்சம் செய்த நிலையில் இந்திய அணி அந்த போட்டியில் வெற்றி பெற்று 2-0 என்ற நிலையில் தொடரில் முன்னிலையில் உள்ளது.
இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான தொடரில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது, அடுத்து இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் முன்னிலையில் இருப்பதால் இறுதி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றால் உலகின் நம்பர் 1 ஒருநாள் அணியாக இந்திய அணி முன்னேறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
ஐசிசி ஒருநாள் அணிகள் தரவரிசையில் தற்போதைய நிலையில் இங்கிலாந்து அணி 113 ரேட்டிங் புள்ளிகளுடன் முதல் இடத்திலும், அதே ரேட்டிங் புள்ளிகளுடன் 2வது மற்றும் 3 வது இடத்தில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் உள்ளன.இந்நிலையில் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றால் ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 இடத்தை இந்திய அணி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் இந்திய மண்ணில் தனது ஒருநாள் தொடர் வெற்றி பயணத்தை இந்திய அணி தொடரும் மேலும் இந்த வெற்றியின் மூலம் டி20 மற்றும் ஒருநாள் தொடர் இரண்டிலும் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை இந்திய அணி பெற்று அசத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இந்திய அணியின் ஒருநாள் உலக கோப்பை பயணம் எந்த தடையும் இல்லாமல் சிறப்பாக சென்று கொண்டிருப்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆனந்தத்தில் உள்ளார்கள், அதேபோல் இறுதி வரை தொடர்ந்து ஒரு நாள் உலக கோப்பையை இந்திய அணி வெல்லும் என்ற நம்பிக்கையை ரசிகர்கள் தெரிவித்துள்ளார்கள்.