இந்தியா vs இலங்கை டி-20 : அக்சர்,சூர்யா குமார் அதிரடி வீண்..! இலங்கை அணி வெற்றி..!
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் 2-வது டி 20 போட்டியில் பூனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் விளையாடினார்கள்,இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பௌலிங்கை தேர்வு செய்தார்.
இதனால் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் பாத்தும் நிஸ்ஸங்க மற்றும் குசல் மெண்டிஸ் இருவரும் அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்தார்கள்,அதிரடியாக விளையாடிய குசல் மெண்டிஸ் 52(31) ரன்களை அடித்து அவுட் ஆனார்.
அதன்பின் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்கள் அடித்து தங்கள் விக்கெட்களை பறிகொடுத்தார்.இந்திய அணியின் கட்டுப்பாட்டில் போட்டி உள்ளது என்று எண்ணிய பொழுது,மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணியின் கேப்டன் தசுன் 56*(22) ரன்களை அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இலங்கை அணி 20-ஓவர்கள் முடிவில் 206 ரன்களை பதிவு செய்தது,அதன்பின் இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் இலங்கை அணியின் பௌலிங்கில் உடனுக்குடன் விக்கெட்களை பறிகொடுத்தனர்.
இந்திய அணியின் சூர்யா குமார் யாதவ் மற்றும் அக்சர் படேல் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடி கொண்டிருந்தார்கள்.அதன்பின் அதிரடியை தொடங்கிய இருவரும் அரை சதம் கடந்தனர்,சூர்யா குமார் யாதவ் 51(36) ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.முதல் டி20 போட்டியில் பவுலிங்கில் அசத்திய சிவம் மாவி இந்த போட்டியில் அதிரடியாக பேட்டிங் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
இறுதிவரை அணியின் வெற்றிக்காக போராடிய ஆல்ரவுண்டர் அக்சர் படேல் 65(31) ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்,பேட்டிங்கில் கலக்கிய இலங்கை அணி கேப்டன் ஷனக 1-ஓவர் பவுலிங் செய்து இரண்டு விக்கெட்களை பெற்றார்.
இந்திய அணியின் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிதும் முயன்றும் பலனளிக்காத நிலையில்,இந்த 2-வது டி20 போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று,தொடரை 1-1 என்ற நிலையில் சமன் செய்தது.இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை தசுன் ஷனக பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது .