ICC T20 World Cup 2022 IND vs SA : கடைசி ஓவர் வரை போராடிய இந்தியா.. வெற்றிகரமான தோல்வி!!
ICC T20 World Cup 2022 IND vs SA : பெர்த்தில் இன்று நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிகரமான தோல்வியை சந்தித்துள்ளது.
டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முந்தைய இரண்டு போட்டிகளிலும் சொதப்பிய தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் மீண்டும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 9 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.
ராகுல் மட்டுமா சொதப்பினார்? மற்றொரு தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா 15 ரன்களிலும், கடந்த இரண்டு போட்டிகளில் அரை சதம் அடித்த விராட் கோலி 12 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர்.
அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் ஒரு பக்கம் நிலைத்து நின்று ஆடினாலும், அதற்கு பின் களமிறங்கியவர்கள் எவரும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. அக்சர் பட்டேலை தூக்கி விட்டு, புதிதாக களமிறக்கப்பட்ட தீபா ஹூடா ஒரு ரன் கூட எடுக்காமல் டக்கவுட் ஆகி வெளியேறினார்.
19வது ஓவர் வரை தாக்குப்பிடித்த சூர்யகுமார் யாதவ் 40 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்தார். இதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களும் அடங்கும். இறுதியில் இந்தியா 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென்னாப்பிரிக்காவின் லுங்கி என்கிடி 4 விக்கெட்டுகளையும், பார்னெல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
134 ரன்கள் எனும் எளிதான இலக்குடன் தென்னாப்பிரிக்கா களமிறங்கிய நிலையில், பவர்பிளே முடிவதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. குயின்டன் டி காக் 1 ரன்னிலும், டெம்பா பாவுமா 10 ரன்களிலும் வெளியேற, ரிலீ ரோசோ டக்கவுட் ஆகி வெளியேறினார். பவர்பிளேவில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், ஷமி 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
முதல் 3 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியான நிலையில் இருந்த தென்னாப்பிரிக்க அணியில் அடுத்து ஜோடி சேர்ந்த ஐடென் மார்க்ரெம் மற்றும் டேவிட் மில்லர் பொறுப்புடன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
10வது ஓவர் வரை பொறுமையாக ஆடிய இருவரும் 11வது ஓவர் முதல் இந்திய பந்துவீச்சை சிதறடிக்க ஆரம்பித்துவிட்டனர். 13வது ஓவரில் டேவிட் மில்லரை ரன் செய்ய வாய்ப்பு கிடைத்தும், அது இந்திய அணியால் வீணாக்கப்பட்டது.
ஐடென் மார்க்ரெம் அரை சதம் அடித்த நிலையில், 17வது ஓவரில் ஹர்திக் பாண்டியா பந்தில் 52 ரன்களில் அவுட்டானார். ஐடென் அவுட்டானாலும், டேவிட் மில்லர் தனது பொறுப்பான ஆட்டத்தால் அணியை வெற்றியை நோக்கி வழிநடத்தினார்.
கடைசி 6 பந்துக்கு 6 ரன்கள் தேவை எனும் நிலையில், 2 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் இலக்கை எட்டி தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சூர்யகுமார் யாதவை தவிர மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் வெறும் 133 ரன்களுக்கு சுருண்டாலும், இந்திய பந்துவீச்சு சிறப்பாக இருந்ததால், இந்திய அணி கடைசி ஓவர் வரை தென்னாப்பிரிக்காவுக்கு டஃப் கொடுத்தது. அந்த வகையில் இந்தியாவுக்கு இது ஒரு வெற்றிகரணமான தோல்விதான்.