கடைசி வரை போராடிய இந்தியா.. ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி!!
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே இன்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில், இந்தியா போராடி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
வங்கதேசத்தின் ஷேர்-இ-பங்களா ஸ்டேடியத்தில் இன்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் மட்டுமே அரை சதம் கடந்து 73 ரன்கள் எடுத்தார்.
இதர வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களில் வெளியேற, இந்திய அணி 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்களுக்கு சுருண்டது. அபாரமாக பந்துவீசிய வங்கதேசத்தின் ஷாஹிப் அல் ஹாசன் 5 விக்கெட்டுகளையும், எபதாத் ஹொசைன் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 187 ரன்கள் எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். வங்கதேச அணியின் லிட்டன் தாஸ் மட்டும் அதிகபட்சமாக 41 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் அதைவிட குறைவான ரன்களில் அவுட்டாகி வெளியேறினர்.
இதனால் வங்கதேசம் வீழ்ந்துவிடும் என எதிர்பார்த்த நிலையில், மெஹிடி ஹசன் கடைசி வரை களத்தில் நின்று 38 ரன்கள் எடுத்ததோடு, 46 ஓவர் முடிவில் இலக்கை எட்டி வங்கதேச அணியை வெற்றி பெறச் செய்தார். இதனால் கடைசி வரை போராடியும் இந்திய அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.