Uber Cup India Qualifies for Knockout Stage : உபேர் கோப்பை.. காலிறுதிக்கு தகுதி பெற்றது இந்திய பேட்மிண்டன் அணி!!
Uber Cup India Qualifies for Knockout Stage : உபேர் கோப்பைக்கான போட்டியில் இன்று நடந்த குரூப் டி ஆட்டத்தில் இந்திய மகளிர் பேட்மிண்டன் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
தொடக்க ஆட்டத்தில் கனடாவை 4-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த இந்தியா, தொடர்ந்து இன்று அமெரிக்காவுக்கு எதிராக இரண்டாவது வெற்றியைப் பெற்று, தங்கள் குழுவில் முதல் இரண்டு இடங்களில் இடம் பிடித்ததன் மூலம் காலிறுதிக்கு தகுதி பெற்றது.
பி.வி.சிந்து மீண்டும் 21-10, 21-11 என்ற கணக்கில் ஜென்னி கய்யை வீழ்த்தி முன்னணியில் இருந்தார். இரட்டையர் பிரிவில் தனிஷா க்ராஸ்டோ மற்றும் ட்ரீசா ஜாலி ஜோடி ஃபிரான்செஸ்கா கார்பெட் மற்றும் அலிசன் லீயை 21-19, 21-10 என்ற கணக்கில் வீழ்த்திய நிலையில், ஆகாஷி காஷ்யப் 21 -18, 21-11 என்ற கணக்கில் எஸ்தர் ஷியை வீழ்த்தியதன் மூலம் இந்தியா 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
எனினும் இளம் இரட்டையர் ஜோடியான சிம்ரன் சிங்கி மற்றும் ரித்திகா தாக்கர் ஜோடி 12-21, 21-17, 13-21 என்ற செட் கணக்கில் லாரன் லாம் மற்றும் கோடி டாங் லீ ஜோடியிடம் போராடி தோல்வியைத் தழுவியது.
இறுதியாக அஷ்மிதா சாலிஹா 21-18, 21-13 என்ற செட் கணக்கில் நடாலி சியை வீழ்த்தி ஆட்டத்தை முடித்தார். இதன் மூலம் காலிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.
இதையடுத்து தனது கடைசி குரூப் ஆட்டத்தில் கொரியாவை அடுத்த புதன்கிழமை இந்தியா எதிர்கொள்கிறது. கடந்த காலங்களில் உபேர் கோப்பையில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை இந்திய மகளிர் அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் இந்திய ஆண்கள் அணியும் தங்கள் குழுவில் முதல் இரண்டு இடங்களுக்குள் இடம்பிடித்ததன் மூலம் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.