French Open Badminton 2022 : முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஜோடி!!
French Open Badminton 2022 : பிரெஞ்சு ஓபன் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று இந்திய நட்சத்திர ஜோடியான சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி, சீன தைபே என அழைக்கப்படும் தைவானின் லு சிங் யாவ் மற்றும் யாங் போ ஹான் ஜோடியை நேரான ஆட்டத்தில் வென்று பிரெஞ்சு ஓபன் சூப்பர் 750 பட்டத்தை வென்றது.
இந்த பட்டத்தை வெல்லும் முதல் இந்திய ஜோடி என்ற சிறப்பையும் இதன் மூலம் பெற்றுள்ளனர். 48 நிமிடங்கள் நீடித்த இறுதிப்போட்டியில் உலகின் 25வது இடத்தில் உள்ள ஜோடியான லு மற்றும் யாங் ஜோடியை 8வது இடத்தில் உள்ள சாத்விக்-சிராக் ஜோடி 21-13, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தினர்.
முன்னதாக 2019 சீசனில் இரண்டாம் இடத்தைப் பிடித்த சாத்விக் மற்றும் சிராக், இந்திய ஓபன் சூப்பர் 500, காமன்வெல்த் விளையாட்டு தங்கம், தாமஸ் கோப்பை மற்றும் உலக சாம்பியன்ஷிப் வெண்கலம் ஆகியவற்றை வென்றதன் மூலம் இந்த ஆண்டும் தங்கள் பதக்க வேட்டையை தொடர்ந்து வருகின்றனர்.
மேலும் இந்த ஜோடி, தற்போது பிரெஞ்ச் ஓபன் 2022 பட்டத்தை வென்றதன் மூலம் 2019 தாய்லாந்து ஓபன் மற்றும் 2022 இந்திய ஓபனுக்குப் பிறகு தங்களது மூன்றாவது உலக டூர் பட்டத்தை வென்றுள்ளனர். சூப்பர் 750 போட்டியை வென்ற முதல் இந்திய ஜோடி என்ற பெருமையையும் சாத்விக் மற்றும் சிராக் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல்முறையாக ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக் மற்றும் சிராஜ் ஜோடி தற்போது பட்டம் வென்றுள்ள நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் 1983 மற்றும் 1984இல் விமல் குமார் என்பவரும், 2000 ஆம் ஆண்டு சித்தார்த் ஜெயின், 2001 ஆம் ஆண்டு அபின் ஷ்யாம் குப்தா மற்றும் 2017'இல் ஸ்ரீகாந்த் கிடாம்பியும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.
அதே நேரத்தில் மகளிர் ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா இது வரை எந்தவொரு பதக்கத்தையும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.