India enters Final in Thomas Cup history first time : நம்ம பாய்ஸ் வேற லெவல் பெர்பார்மன்ஸ்.. 73 ஆண்டுகளிலும் முதல் முறையாக.. வரலாற்றுச் சாதனை!!
India enters Final in Thomas Cup history first time : பேட்மிண்டனில் மிகவும் மதிப்புமிக்க தாமஸ் கோப்பைக்கான போட்டியில், 73 ஆண்டுகால வரலாற்றில் இந்தியா தற்போது முதல் முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்று அசத்தியுள்ளது.
தாய்லாந்தின் பாங்காக்கில் நடந்த அரையிறுதிப் போட்டியில், 2016 சாம்பியன் டென்மார்க்கை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற கிடாம்பி ஸ்ரீகாந்த், சாத்விக்சாய்ராஜ் ரன்கிரெட்டி/சிராக் ஷெட்டி மற்றும் எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் டென்மார்க்கிற்கு எதிரான தாமஸ் கோப்பை அரையிறுதியில் இந்தியாவுக்கு வெற்றிகளைத் தேடித்தந்தனர்.
இந்த அணியின் தலைவரான ஸ்ரீகாந்த் 2022 ஆம் ஆண்டு தாமஸ் கோப்பையில் ஒரு சிறந்த சாதனையைப் படைத்துள்ளார். இதுவரை அவர் விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். அதே சமயம் பிரணாய் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார்.
முன்னதாக கடந்த வியாழன் அன்று, காலிறுதியில் வென்றதன் மூலம் இந்தியா 1979க்குப் பிறகு முதல் அரையிறுதியை எட்டி தனது முதல் பதக்கத்தை உறுதி செய்தது. அதில் மலேசியாவை 3-2 என்ற கணக்கில் தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்தனர்.
இந்நிலையில், தற்போது அரையிறுதியிலும் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியதன் மூலம், குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்ததோடு, முதல்முறையாக இறுதிப் போட்டியில் நுழைந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். இதே முனைப்போடு கோப்பையை கைப்பற்றி புதிய வரலாறு படைக்க வேண்டும் என ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
இதற்கிடையே இந்திய பெண்கள் அணி காலிறுதிச் சுற்றில் தாய்லாந்திடம் 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியுள்ளது.