Deaflympics 2022 : காது கேளாதோர் ஒலிம்பிக்.. மதுரை பள்ளி மாணவி 3 தங்கம் வென்று அசத்தல்!!
Deaflympics 2022 : பிரேசிலில் உள்ள காக்சியாஸ் டூ சுல் நகரில் நடைபெற்று வரும் 24வது கோடைகால காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பாட்மிண்டன் போட்டியில் மதுரையைச் சேர்ந்த ஜே.ஜெர்லின் அனிகா தங்கப் பதக்கம் வென்றுள்ளார். கலப்பு இரட்டையர் பாட்மிண்டன் போட்டி மற்றும் குழு பூப்பந்து போட்டியிலும் அவர் ஏற்கனவே தங்கப் பதக்கம் வென்றார்.
ஒற்றையர் பிரிவில் ஜெர்லின் அனிகா ஆஸ்திரியாவின் கே. நியூடோல்ட்டை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார். கலப்பு இரட்டையர் பிரிவில் ஜெர்லின் அனிகா-அபினவ் சர்மா ஜோடி மலேசியாவின் பூன்-டியோ ஜோடியை வீழ்த்தி பதக்கம் வென்றது. அதேபோல் ஜப்பான் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.
தமிழகத்தின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனை அனிகா மதுரை மாநகராட்சி அவ்வை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படிப்பு வருகிறார். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் நாட்டிற்காக பல பதக்கங்களை வென்றுள்ள இவர் தனது இரண்டாவது டிஃப்லிம்பிக்ஸில் பங்கேற்கிறார்.
முன்னதாக, 2017 ஆம் ஆண்டு துருக்கியில் உள்ள சாம்சுனில் நடைபெற்ற காது கேளாதோர் ஒலிம்பிக்கில் பங்கேற்றார். அந்த டிஃப்லிம்பிக்ஸில் மிக இளம் வயது வீராங்கனை இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெர்லின் அனிகா தனது எட்டு வயதில் பேட்மிண்டன் விளையாடத் தொடங்கினார். பேட்மிண்டன் கோர்ட்டில் தனது முதல் நாளை நினைவு கூர்ந்த அவரது பயிற்சியாளர் டி.சரவணன், ஜெர்லின் அனிகாவின் தந்தை ஜே.ஜெயரட்சகன், தான் பூப்பந்து விளையாட்டில் ஆர்வமாக இருந்ததால் மதுரையில் உள்ள பயிற்சி முகாமிற்கு அழைத்து வந்ததாக கூறினார்.
அதன்பிறகு ஜெர்லின் அனிகாவின் ஒவ்வொரு போட்டியிலும் அவரது ஆட்டம் மேம்பட்டது. 2017 காது கேளாதோர் ஒலிம்பிக்கில் இளம் வீராங்கனையாக இருந்த போதிலும், அவர் காலிறுதி வரை முன்னேறி அசத்தினார். அதன் பின்னர் மிகவும் கடினமாக பயிற்சி செய்து தற்போதைய காது கேளாதோர் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கங்களை வென்றார் என்று சரவணன் மகிழ்ச்சியுடன் கூறினார்.