Badminton Asia Championship : ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி.. வெற்றியுடன் தொடங்கிய சாய்னா நேவால்!!
Badminton Asia Championship : பிலிப்பைன்ஸில் நடந்து வரும் பேட்மிண்டன் ஆசியா சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். அதே நேரத்தில் இந்தியாவின் மற்ற வீரர்களான லக்சயா சென் மற்றும் சாய் பிரனீத் தங்களது முதல் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறியுள்ளனர்.
2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா நேவால், தற்போது நடந்து வரும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தனது தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றார். காயங்களில் இருந்து மீண்டுள்ள சாய்னா, தென் கொரியாவின் சிம் யுஜினை 21-15 17-21 21-13 என்ற கணக்கில் வென்றார்.
ஆனால், உலக சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்ற லக்சயா சென், தரவரிசையில் இடம் பெறாத சீனாவின் லி ஷி ஃபெங்கிடம் திணறினார். லக்சயா 56 நிமிடங்கள் நீடித்த தனது தொடக்கச் சுற்றின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 21-12 10-21 19-21 என்ற கணக்கில் தோற்றார்.
உலகின் 19-ம் நிலை வீரரான சாய் பிரனீத், இந்தோனேசியாவின் ஜொனாடன் கிறிஸ்டிக்கு எதிராக 17-21 13-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் முதல் நிலை வீராங்கனையான அகானே யமாகுச்சிக்கு எதிராக 15-21 9-21 என்ற கணக்கில் ஆகர்ஷி காஷ்யப் தோல்வியடைந்தார்.
பெண்கள் இரட்டையர் ஜோடியான அஷ்வினி பட் கே, ஷிக்கா கவுதம் மற்றும் சிம்ரன் சிங்கி, ரித்திகா தாக்கர் ஜோடிகள் நேர் செட்டில் தோல்வியடைந்து தொடக்கச் சுற்றில் வெளியேறினர்.
பட் மற்றும் கௌதம் 19-21 12-21 என்ற கணக்கில் மலேசியாவின் அன்னா சிங் யிக் சியோங் மற்றும் தியோ மே ஜிங் ஜோடியிடம் தோல்வியடைந்தனர். சிங்கி மற்றும் தாக்கர் 15-21 11-21 என்ற கணக்கில் ஏழாவது நிலை மலேசிய ஜோடியான பேர்லி டான் மற்றும் முரளிதரன் தினாவிடம் தோல்வியடைந்தனர்.
தற்போதைய நிலையில் சாய்னா நேவால் மற்றும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், பிவி சிந்து, மாளவிகா பன்சோத் மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் தங்களுடைய ஒற்றையர் ஆட்டங்களில் விரைவில் களமிறங்க உள்ளனர்.